நேதாஜி இன்னும் உயிரோடு இருக்கிறாரா? விளக்கம் அளிக்க மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு
Recommended Video
டெல்லி: சுதந்திர போராட்ட வீரர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் அடைந்தாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பது குறித்து விளக்கம் அளிக்கும் படி, தேசிய ஆவண காப்பகத்திற்கு, மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திர போராட்ட காலத்தில், இந்திய தேசிய ராணுவம் என்ற அமைப்பை உருவாக்கியவர் நேதாஜி. காந்தியடிகள் அகிம்சை வழியில் வெள்ளையர்களை எதிர்த்தார். நேதாஜியோ இளைஞர்கள் பலருக்கும் ஆயுதப் பயிற்சி உள்ளிட்ட ராணுவ பயிற்சி அளித்து வெள்ளையர்களை எதிர்த்தார்.
வீரம், தலைமை பண்பு ஆகியவற்றால், நேதாஜி என்று அன்போடு அழைக்கப்படலானார். மகாத்மா காந்தியை காந்திஜி என்று வட இந்தியர்கள் அழைத்தனர்.
[காசு, பணம், துட்டு, மணி, மணி.. நடுரோட்டில் கத்தை கத்தையாக பணம்.. காற்றில் பறந்த நோட்டுகள்]
விமான விபத்து
இந்த நிலையில்தான், நேதாஜி வெளிநாட்டிற்கு சென்றபோது, மர்மமான முறையில், விமான விபத்தில் இறந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவரது மரணம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் உலவி வருகின்றன. தெளிவான ஒரு கருத்தும் இதுவரை வெளியாகவில்லை.
ஆர்டிஐ
இவரது மரணம் குறித்த ஆவணங்கள், சமீபத்தில் வெளியிடப்பட்டபோதிலும், தனக்கு திருப்தி அளிக்கும் வகையிலான தகவல்கள் இடம் பெறவில்லை என்று கூறும் அவ்தேஷ் குமார் சதுர்வேதி என்ற சமூக ஆர்வலர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதுபற்றி கேள்வி எழுப்பினார்.
பதில்
நேதாஜி உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை நன்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர், தன் மனுவில் தெரிவித்திருந்தார். சதுர்வேதி எழுப்பியுள்ள கேள்விகளுக்கு, உரிய ஆவணங்களுடன் பதில் அளிக்கும்படி, மத்திய ஆவண காப்பகத்திற்கு, தகவல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
ஆவண காப்பகம்
நேதாஜி மரணம் குறித்த ரகசியங்கள் வெளியிடப்பட்டு, அது குறித்த ஆவணங்கள் அனைத்துமே, மத்திய ஆவண காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே, மத்திய தகவல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து தகவல் கமிஷன் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.