ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு.. தருண் அகர்வால் குழு பரபரப்பு அறிக்கை
Recommended Video

டெல்லி: தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவு தவறு என்று முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றது.

பொதுமக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக கூறி, கடந்த மே மாதம் 28ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு மாவட்ட நிர்வாகம் மூலமாக சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்ந்தது.
இதையடுத்து, மேகாலயா உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்.
இந்த குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை ஆய்வு நடத்தினார். ஆய்வு நடத்தி அறிக்கையை பசுமை தீர்ப்பாயத்தில் மூன்று தினங்களுக்கு முன்பாக இந்த குழு தாக்கல் செய்தது.
48 தனித்தனி சீலிடப்பட்ட கவர்களில் நிலத்தடி நீர், காற்று மாசு, சுற்றுப்புறச்சூழல் மாசு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தருண் அகர்வால் குழு வழங்கிய பரிந்துரைகள் தெரியவந்தது. அதன் முக்கிய அம்சங்கள்:
* ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது தவறு
* ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு உரிய காரணம் இல்லை
* ஸ்டெர்லைட் ஆலையிடம் தமிழக அரசு விளக்கம் கேட்கவில்லை
* ஸ்டெர்லைட் ஆலையின் நியாயத்தை கேட்காமல் தமிழக அரசு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது
* நிலத்தடி நீர், காற்று மாசு ஆகியவற்றை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து ஆய்வு செய்யலாம்
இவ்வாறு தருண் அகர்வால் குழு வழங்கிய பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பரிசீலித்த, பசுமை தீர்ப்பாயம், இந்த அறிக்கை பற்றி 1 வாரத்தில் தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, டிசம்பர் 7ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications