"முதலில் கூட்டணி! அடுத்து பிராந்திய கட்சிகளை அழிப்பதே அவர்கள் பிளான்!" போட்டுடைக்கும் சரத் பவார்
டெல்லி: பீகாரில் அடுத்தடுத்து அரசியல் குழப்பங்கள் அரங்கேறி வரும் சூழலில் இது தொடர்பாக மூத்த அரசியல்வாதி சரத் பவார் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதம் தான் மகா விலாஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தியாளர்கள் என்சிபி- காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொண்டனர்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தியாளர்கள் பலரும் திரண்ட நிலையில், பாஜக உடன் கைகோர்த்து அவர்கள் ஆட்சியை அமைத்தனர். ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.

சரத் பவார்
அதேநேரம் அங்கு ஆட்சி அமைத்த 40 நாட்களுக்குப் பீகாரில் பாஜக கூட்டணி கவிழ்ந்தது. பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் உடன் இணைந்து ஆட்சியை அமைத்தார் நிதிஷ்குமார். இது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. இந்தச் சூழலில் மகாராஷ்டிரா மற்றும் பீகார் அரசியல் சூழல் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத் பவார் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஷிண்டே மீது தாக்கு
இது தொடர்பாக அவர் கூறுகையில், "சிவசேனா தேர்தல் சின்னம் தொடர்பாக நடந்து வரும் சண்டை வருத்தமளிக்கிறது. வில் அம்பு சின்னம் மறைந்த பாலாசாகேப் தாக்கரேவால் தீர்மானிக்கப்பட்டது. இது சிவசேனாவுக்கே சொந்தமானது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு அவர்களுடன் மாற்றுக் கருத்து இருந்தால், அவர் சொந்தமாகக் கட்சியை உருவாக்கிக் கொள்ளட்டும். புதிய சின்னத்தை தேர்ந்தெடுத்து மக்களிடம் சென்று வெல்லட்டும்.

பிராந்திய கட்சிகள்
எனக்கும் காங்கிரஸ் தலைமைக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாகவே நான் காங்கிரஸில் இருந்து விலகி என்சிபியை தொடங்கினேன். முடிந்தால் ஏக்நாத் ஷிண்டே அதை செய்யட்டும். பாஜகவின் திட்டத்தின்படியே சிவசேனா பிளவுபட்டு உள்ளது. ஷிண்டே பாஜகவுக்கு உதவி உள்ளார். சமீபத்தில் ஜேபி நட்டா பிராந்திய கட்சிகளே இனி இருக்காது எனக் கூறி இருந்தார். இதை நாம் முக்கியமானதாகப் பார்க்க வேண்டும்.

அழிக்கிறது
பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் கூட பாஜக தங்கள் கட்சியை அழிக்க முயல்வதாகவே கூறி இருந்தார். பாஜகவின் நீண்டகால கூட்டணிக் கட்சியான அகாலி தளமும் அழிந்து வருகிறது. சிவசேனாவுக்கும் இதே செய்தார்கள். அடுத்து பாஜகவின் திட்டம் தனக்குத் தான் என்பதே நிதிஷ்குமார் உணர்ந்து மிகச் சரியான முடிவை எடுத்துள்ளார். இது தான் அவருக்கும் பீகார் மாநிலத்திற்கும் நல்லது.

திட்டம் என்ன
பாஜகவின் திட்டம் எப்போதும் ஒன்று தான். கூட்டணி சமயத்தில் வலுவான பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி வைப்பார்கள். சரியாகத் திட்டமிட்டுத் தேர்தலில் கூட்டணியில் இருக்கும் கட்சி குறைவான இடங்களைப் பெறுவதை உறுதி செய்வார்கள். அதன் பின்னர், சத்தமில்லாமல் கூட்டணி வைத்த பிராந்திய கட்சிகளையே அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். இதுதான் அவர்கள் ஸ்டைல்.

அண்டை நாடுகள்
நாம் நமது அண்டை நாடுகளிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றத் தவறினால், இலங்கை போன்ற ஒரு நிலை உருவாகும். அதிகாரம் அனைத்தும் ஒரே இடத்தில் குவிக்கப்படும்போது, இதுபோன்ற கேள்விகள் எழுகின்றன. இந்தியாவில் அதிகாரம் ஒரே இடத்தில் குவிக்கப்படுவது பல்வேறு கேள்விகளைப் பொதுமக்களிடையே எழுப்புகிறது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications