மீண்டும் தாமரை மலருமா? மோடி தலைமையில் தொடங்கியது பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் தொடங்கி இருக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு உள்ளனர்.
இந்தியாவில் வரும் 2024 ஆம் ஆண்டு லோக் சபா தேர்தல் நடைபெற உள்ளது. 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்து வரும் மோடி தலைமையிலான பாஜக அரசு இதில் மீண்டும் வென்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் தற்போதே இறங்கிவிட்டது.

மறுபக்கம் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், தேசிய மாநாடு கட்சி, சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்டவை பாஜகவை மீண்டும் மத்தில் ஆட்சியில் அமர வைக்கக்கூடாது என கங்கனம் கட்டிக்கொண்டு இறங்கி இருக்கின்றன. இதற்காக இன்றோடு சேர்த்து 2 முறை எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி கூட்டணிக்கு இந்தியா என்று பெயரையும் சூட்டி உள்ளன.
மறுபக்கம் அதே நாளான இன்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்த கட்சிகள், அடுத்தடுத்து நடைபெற்ற பல மாநில தேர்தல்களில் கூட்டணியில் இருந்த கட்சிகள், இடையில் கூட்டணி மாறி ஆட்சியை ஏற்படுத்திய கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் 39 கட்சிகள் கலந்துகொள்ளும் என நேற்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவித்தார். ஒரே நாளில் எதிர்க்கட்சிகள் கூட்டமும், பாஜக கூட்டணி கட்சிகள் கூட்டப்படுவது பெரும் விவாதப்பொருளானது. தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், பாரிவேந்தரின் ஐஜேகே, ஜான் பாண்டியனின் தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம், ஏசி சண்முகத்தின் புதிய நீதி கட்சி உள்ளிட்டவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்கும் கட்சிகளின் எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையை காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு எம்பி கூட இல்லாத பல கட்சிகளை பாஜக இந்த கூட்டத்திற்கு அழைத்து இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் டெல்லியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் கூடியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் பாஜக மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பலர் பங்கேற்று உள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் ஜான் பாண்டியன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு உள்ளனர்.
இந்த கூட்டத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த கூட்டம் பற்றி ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, "நாடு முழுவதிலும் இருந்து தலைநகர் டெல்லிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் வந்து இருப்பது அளவற்ற மகிழ்ச்சியை தருகிறது. நாட்டின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்லும் கூட்டணி இது." என்று குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications