ஜனாதிபதி தேர்தல்:பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு வேட்புமனுத் தாக்கல் -அதிமுக பங்கேற்பு!
டெல்லி: நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் பதவிக் காலம் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.

மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியின் வேட்பாளராக ஒடிஷாவை சேர்ந்த பழங்குடி இனத் தலைவர் திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.

பாஜக கூட்டணி வேட்பாளரான திரெளபதி முர்மு, இன்று நாடாளுமன்ற ராஜ்யசபா செயலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநிலங்களின் முதல்வர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

பொதுவாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை 50 எம்.பிக்கள் முன்மொழிய வேண்டும். பிரதமர் மோடி, திரெளபதி முர்முவின் வேட்புமனுவை முதலில் முன்மொழிந்தார். பின்னர் மத்திய அமைச்சர்கள் முன்மொழிந்தனர். முன்னதாக டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று திரெளபதி முர்மு நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

திரெளபதி முர்பு வேட்புமனுத் தாக்கல் நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்று அதிமுகவின் இரட்டை தலைவர்களான ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு பாஜக நேற்று நேரில் முறைப்படி அழைப்பு விடுத்தது. இதையடுத்து ஓபிஎஸ், ஈபிஎஸ் கோஷ்டிகள் டெல்லி சென்று திரெளபதி முர்மு வேட்புமனுத் தாக்கல் நிகழ்வில் பங்கேற்றன.












Click it and Unblock the Notifications