கடந்த கால வெற்றி தலைக்கனமாக மாறக்கூடாது.. தீர்க்கமான நடவடிக்கை தேவை.. ஆலோசனை கூட்டத்தில் மோடி பேச்சு
டெல்லி: நாட்டில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை ஏற்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் கொரோனா பரவல் படிப்படியாகக் குறைந்து வந்தது. இருப்பினும், ஜனவரி மாதம் முதல் நாட்டிலுள்ள சில மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்தது.
இது குறித்து ஆராயச் சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டது. இந்த வல்லுநர் குழுவில் உள்ள சிறப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மோடி பேச்சு
தற்போது நாட்டின் பல மாநிலங்களிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, "இந்த வைரஸ் பரவலை நாம் உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும்" என்றார்.

தீர்க்கமான நடவடிக்கை தேவை
மேலும், கொரோனா பரவலின் இரண்டாவது அலை ஏற்படுவதை நாம் தடுக்க வேண்டும் என்றும் இதற்காகப் பெரிய மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். கடந்த காலங்களில் கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டத்தில் கிடைத்த நம்பிக்கை காரணமாக இப்போது நாம் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

தலைக்கனமாக மாறிவிடக்கூடாது
கடந்த காலத்தில் கொரோனா பரவல் போது நமக்குக் கிடைத்த வெற்றியால் இப்போது தலைக்கனத்துடன் இருக்கக் கூடாது என்றும் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தாமல் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மம்தா ஆப்சேன்ட்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை. மேற்கு வங்க தேர்தல் அடுத்த வாரம் முதல் நடைபெறவுள்ளதால், மம்தா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. அதேபோல, அசாம் மாநில தேர்தலுக்காகப் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இதில் கலந்து கொள்ளவில்லை.

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா
கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவல் திடீரென்று அதிகரித்துள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல சிகிச்சை பலனின்றி நேற்று மட்டும் 188 பேர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி
மறுபுறம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது முன்களப் பணியாளர்கள், 60 வயதைக் கடந்தவர்கள், 45 வயதைக் கடந்து உடல்நிலை பாதிப்பு உள்ளவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications