நாடு முழுவதும் 16.10 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர்.. முதல்முறையாக தமிழிலும் தேர்வு நடைபெற்றது
சென்னை: மருத்துவ சேர்க்கைக்கான நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இந்த தேர்வைத் தமிழகத்தில் மட்டும் 1.10 லட்சம் பேர் எழுதினர்.
Recommended Video
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு தேசிய அளவில் நடத்தப்படுவதால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு பொசுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனால் கடந்த 4 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு இருந்து வருகிறது. மேலும் இந்த தேர்வால் தங்கள் மருத்துவ கனவு கலைந்து போனதால் அரியலூர் அனிதா உள்பட ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டார்கள். எனவேதான் நீட் தேர்வை உயிரைக் குடிக்கும் அரக்கனாக பார்க்கிறார்கள்.
நீட் தேர்வு நடத்தப்படுவது ஒரு புறம் இருந்தால் இந்த தேர்வை காரணம் வைத்து மாணவ, மாணவிகளை உளவியல் ரீதியாக தொல்லை கொடுப்பதை யாராலும் ஏற்க முடியவில்லை. காதில் தோடு, தலையில் கிளிப், மூக்கில் மூக்குத்தி, வாட்ச் உள்ளிட்ட பொருட்களை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது போதாக்குறைக்கு மாணவிகள் துப்பட்டாவை கூட அணியக் கூடாது என்பது பெற்றோரை வேதனையடையச் செய்கிறது.இப்படி பல்வேறு எதிர்ப்புக்குள்ளான இந்த நீட் தேர்வு கடந்த முறை கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மதியம் 2 மணிக்குத் தொடங்கிய நீட் தேர்வு 5 மணிக்கு நிறைவடைந்தது. இந்த தேர்வுக்கு வருவோருக்கு என் 95 மாஸ்கை தேசிய தேர்வு முகமை வழங்கியது. நாடு முழுவதும் தொடங்கிய இந்த தேர்வு இந்த ஆண்டு முதல்முறையாக தமிழ், மலையாளம், பஞ்சாபி உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தமிழில் தேர்வு எழுத 19,867 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
மேலும் மாணவர்களின் நலன் கருதி இந்தியா முழுவதும் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155 லிருந்து 198 ஆக உயர்த்தப்பட்டது. தமிழகத்திலிருந்து நீட் தேர்வை எழுத 1,10,971 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 40,376 மாணவர்களும் 70,594 மாணவிகளும் விண்ணப்பித்திருந்தனர். மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஒருவரும் இந்த தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 17,992 பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தில் 18 நகரங்களில் உள்ள 224 மையங்களில் தேர்வு நடைபெற்றது. பொதுவாக நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்குக் கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகளுடன் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கடைப்பிடிக்கப்படுவதால் மாணவர்கள் 1.30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வந்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. 1.30 மணிக்கு மேல் வந்த மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படப்படவில்லை.
இதற்காகக் காலை முதலே தேர்வு மையங்கள் மாணவர்கள் குவிந்தனர். இதையடுத்து தேர்வு விதிமுறைகள், கொரோனா விதிமுறைகள் கடைப்பிடித்து காலை 11.30 மணி முதல் தேர்வுக் கூடத்திற்கு அனுமதிக்கப்பட்டார்கள். தமிழக அரசின் இலவச பயிற்சி பெற்ற 590 மாணவர்கள் எழுதுகிறார்கள். நீட் தேர்வைக் கண்காணிக்க 35 கண்காணிப்பாளர்கள், 35 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
தேர்வுக்கு முந்தைய 14 நாட்களில் கொரோனா அறிகுறிகள் இருந்ததா போன்ற விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். ஹால் டிக்கெட்டின் முதல் பக்கத்தில் கொரோனா குறித்த சில விவரங்களைப் பூர்த்தி செய்யவும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. மருத்துவ படிப்பு கனவுடன் மதியம் 2 மணிக்குத் தேர்வை எழுதத் தொடங்கிய மாணவர்கள் மாலை 5 மணி வரை எழுதினர். நீட் தேர்வை எதிர்த்து நாளை தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications