இனி ஆன்லைனில் நீட் தேர்வு.. 2027 முதல் அமலுக்கு கொண்டு வர திட்டம்.. அறிவித்தார் மத்திய கல்வி அமைச்சர்
டெல்லி: கடந்த 3ம் தேதி நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான மறுதேர்வு ஜூன் 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த திட்டமிட்டு வருவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று அறிவித்துள்ளார்.
நம் நாட்டில் மருத்துவ படிப்புகளை படிக்க ‛நீட்' தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தேர்வு முகமை சார்பில் இந்த தேர்வு நம் நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட பிற இளநிலை மருத்துவ படிப்புகளை படிக்க விரும்பும் மாணவ-மாணவிகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3ம் தேதி நடந்தது. மொத்தம் 22 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர்.
ஆனால் தேர்வுக்கு முன்பாகவே ராஜஸ்தானின் நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. அதாவது ராஜஸ்தானில் நீட் தேர்வு மாதிரி வினாத்தாள் என்று சமூக வலைதளங்களில் பரவியது. அதில் இடம்பெற்றிருந்த ஏராளமான கேள்விகள் அப்படியே நீட் தேர்வு கேள்வித்தாளிலும் இடம்பெற்றிருந்தது.
இதையடுத்து வினாத்தாள் முன்கூட்டியே கசிந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதுபற்றி சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டு கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 3ம் தேதி நடந்த நீட் தேர்வு அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான மறுதேர்வு ஜூன் 21ல் நடத்தப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்த மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜூன் 14ல் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தான் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது நீட் தேர்வை ஆன்லைனில் நடத்துவது பற்றி முக்கிய விஷயத்தை தெரிவித்தார். இதுபற்றி தர்மேந்திர பிரதான் கூறுகையில், ''நீட் தேர்வு அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் (Computer Base Test or CBT) முறைக்கு மாற்றுவது தேவையாக உள்ளது'' என்றார்.
தற்போது நீட் தேர்வு என்பது ஓஎம்ஆர் ஷீட் மூலமாக தனி கேள்வித்தாளுடன் நடைபெறுகிறது. இந்த முறை வினாத்தாள் கசிவால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சர்ச்சையை தவிர்க்க மத்திய அரசு நீட் தேர்வை ஆன்லைன் முறைக்கு மாற்றம் செய்ய தயாராகி வருகிறது.
ஜேஇஇ மெயின் தேர்வு உள்பட பிற நுழைவு தேர்வுகள் ஆன்லைனில் தான் நடைபெற்று வருகிறது. அதேபோல் நீட் தேர்வையும் ஆன்லைனில் மாற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இருப்பினும் ஜூன் 21ம் தேதி நடக்கும் நீட் தேர்வில் எந்த மாற்றமும் கிடையாது. வழக்கம்போல் தான் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications