பல லட்சம் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.. நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது.. மத்திய அரசு அபிடவிட்
டெல்லி: நீட் தேர்வை ரத்து செய்தால் நேர்மையாக இந்த தேர்வை எழுதிய பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் நீட் தேர்வை ரத்து செய்வது நியாயமாக இருக்காது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நீட் கடந்த மே 5 ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன.

சுமார் 24 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதிய நிலையில், இந்த முறைகேடு புகார்கள் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது, ஆள் மாறாட்டம் என அடுத்தடுத்து சர்ச்சைகள் வெடித்தன. கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதை ரத்து செய்த தேசிய தேர்வு முகமை, குறிப்பிட்ட அந்த மாணவர்களுக்கு மட்டும் மறு தேர்வு நடத்தியது.
நீட் தேர்வு முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்ததால், நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. இதனிடையே நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த சிபிஐ சிலரை கைது செய்து விசாரணை செய்து வருகிறது.
பல லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நீட் தேர்வு விவகாரத்தில் எழுந்த இந்த குளறுபடிகள் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை ஒன்றாக விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், 2024-ல் நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்தால் நேர்மையாக இந்த தேர்வை எழுதிய லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது. நீட் தேர்வில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததற்கு ஆதாரம் இல்லை" என்று தெரிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு வர உள்ள நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications