நீட் 2021 -கொரோனா அச்சத்தால் நீட் தேர்வை தள்ளி வைக்கும் திட்டமில்லை.. தேசிய தேர்வு முகமை திட்டவட்டம்
டெல்லி: வரும் செப். 11ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நீட் தேர்வு தள்ளி வைக்கப்படுவதாகத் தகவல் வெளியான நிலையில், அதை முற்றிலுமாக மறுத்துள்ள தேசிய தேர்வு முகமை திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்றும் தேர்வைத் தள்ளிவைப்பது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. இதன் காரணமாக மாணவர்களுக்கு இணையம் மூலம் பள்ளி, கல்லூரி பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா முதல் அலை குறைந்த போது, பள்ளி, கல்லூரிகள் சில காலம் திறக்கப்பட்டன. இருப்பினும், 2ஆம் அலை கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் உச்சம் பெற்றதால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.

பொதுத்தேர்வு ரத்து
மேலும், பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்ததால், முதலில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டது. 10 மற்றும் 11ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் 12ஆம் வகுப்பு பருவத்தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாண்டவர்களுக்கு +2 பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்கப்பட்டது.

நீட் தேர்வு
நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலமே நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் அச்சம் உள்ளதால், மாணவர்கள் ஒரே அறையில் 3 மணி நேரம் வரை தேர்வு எழுதும்போது கொரோனா பரவ அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இருப்பினும், தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி வரும் செப். 12ஆம் தேதி இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வும் செப். 11ஆம் தேதி முதுநிலை படிப்புகளுக்கான நீட்தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஒத்தி வைக்க வேண்டும்
இருப்பினும், கொரோனா அச்சம் இருப்பதால், குறிப்பாக 3ஆம் அலையில் சிறார்கள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறும் நிலையில், நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்ற பலரும் கோரிக்கை விடுத்தனர். நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என இணையத்தில் தொடங்கப்பட்ட இயக்கத்தில் சுமார் 1400 மாணவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். நீட் நடைபெறும் நாளன்று சிபிஎஸ்சி தனித்தேர்வு மற்றும் இதர மாநில தேர்வுகளும் நடைபெறுவதால் மாணவர்கள் சிரமத்தை எதிர்கொள்வார்கள் என்றும் இதனால் நீட்டை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் சிலர் குறிப்பிட்டனர்.

அக்டோபர் மாதம்
மேலும், மாணவர்கள் தரப்பில் "கொரோனாவால் மாணவர்கள் ஏற்கனவே மனஅழுத்ததில் உள்ளனர். இந்தச் சூழலில் தேர்வுகளும் இப்படி ஒரே நேரத்தில் நடத்தப்படுவது மாணவர்களை மேலும் பாதிக்கும். எனவே மாணவர்களின் நலன் கருதி அக்டோபர் மாதத்திற்கு நீட் தேர்வை ஒத்திவைப்பது குறித்து கல்வி அமைச்சரும், தேசிய தேர்வு முகமையும் முடிவெடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

ஒத்தி வைக்க முடியாது
இந்நிலையில் திட்டமிட்டபடி நீட் தேர்வு என்று தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நீட் தேர்வைத் தள்ளிவைக்க முடியாது என்றும் தேசிய தேர்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வைத் தள்ளிவைப்பது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது.












Click it and Unblock the Notifications