அமித்ஷாவின் “ஆக்ஷன்”.. இறந்தவுடன் வாக்காளர் பெயர் நீக்கம்! NRC பதிவேடு தொடர்பாக வரும் புதிய சட்டம்
டெல்லி: வாக்காளர் அடையாள அட்டை, தேசிய குடிமக்கள் பதிவேடு, அரசு நலத்திட்டங்கள் பெறும் மக்களின் பட்டியல்களில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை இணைப்பதற்கான மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.
மத்தியில் பாஜக அரசு ஆட்சி அமைத்ததில் இருந்தே பல்வேறு ஆவணங்களை ஒன்றோடு ஒன்று இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஆதாருடன் பான் கார்ட், ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு போன்ற நடவடிக்கைகளை அரசு செய்து வருகிறது.

இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் புதிய சென்சஸ் அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். "பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்து இருக்க வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேதி குறிப்பிடாமல் அப்பணிகள் ஒத்தி வைக்கப்பட்டன.
இதற்கு முன்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் சென்சஸ் நடைபெற்றது. ஆனால், அடுத்து 13 ஆண்டுகளாகியும் இதுவரை சென்சஸ் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் புதிய சென்சஸ் அலுவலக திறப்பு விழாவில் பேசிய அமித்ஷா அடுத்த சென்சஸ் எப்போது நடைபெறும் என்று குறிப்பிடவில்லை. அதே நேரம் 2 சென்சஸ் கணக்கெடுப்புக்கு இடைப்பட்ட காலத்தில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பதிவுகள் அரசு நலத்திட்ட பணிகளுக்கு உதவுகின்றன என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ஒருவர் 18 வயதை கடந்த உடனே வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்படும் முயற்சியை மேற்கொள்ள உள்ளது. ஒருவர் இறந்துவிட்டால், அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக சென்சஸ் பதிவாளர் அவரது குடும்பத்திற்கு நோட்டீஸ் அனுப்புவார்.
அவரது குடும்பம் 15 நாட்களுக்குள் தங்கள் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம். இதற்காக கொண்டு வரப்படும் எஸ்.ஆர்.எஸ். எனப்படும் மாதிரி பதிவு முறை தொழில்நுட்பத்தால் கணக்கீட்டாளர் தரவுகளை மாற்ற முடியாது." என்று கூறி அவர் மேம்படுத்தப்பட்ட எஸ்.ஆர்.எஸ். மொபைல் செயலியை அறிமுகம் செய்தார்.
எஸ்.ஆர்.எஸ். என்பது ஆண்டுதோறும் இந்திய தலைமை பதிவாளர் அலுவலகம் மேற்கொள்ளும் பெரிய அளவிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியாகும். பிறப்பு விகிதம், இறப்பு விகிதம் போன்றவற்றை இதன் மூலம் கணக்கிடுகிறார்கள். இதுகுறித்து பேசிய அமித்ஷா, "யாராவது ஒரு அதிகாரி மோசடி செய்தாலும், தேசிய மற்றும் மாநில அளவில் எச்சரிக்கை செல்லும்.

ஒருவர் வேறொரு பகுதியில் இருந்துகொண்டு சர்வே செய்ய முயன்றாலும் கண்டுபிடித்துவிடலாம். சென்சஸ் என்பது துல்லியமானது கிடையாது. தற்போது எலெக்டிரானிக் மூலமாக சென்சஸ் செய்யப்படுகிறது. மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், வீடு, மின்சாரம், மருத்துவம் போன்றவற்றை சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளாகியும் செய்ய முடியவில்லை.
தரவுகள் இல்லாத காரணத்தால் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்திலும் இதனால் தொய்வு உள்ளது. பிறப்பு மற்றும் இறப்பை வாக்காளர் அடையாள அட்டை, தேசிய குடிமக்கள் பதிவேடு, அரசு நலத்திட்டங்கள் பெறும் மக்களின் பட்டியல்களில் இணைப்பது அவசியம். இதற்காக அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் புதிய மசோதா கொண்டு வரப்படும்.












Click it and Unblock the Notifications