சென்னை உள்பட 7 விமான நிலையங்களில்.. இன்று முதல் புதிய ஃபாஸ்ட்-ட்ராக் இமிக்ரேஷன் சிஸ்டம்.. விவரம்
டெல்லி: வெளிநாடு பயணம் செய்யும் பயணிகள் விமான நிலையங்களில் குடியேற்ற நடைமுறையை முடிப்பதற்கு அதிக நேரத்தை செலவிட தேவையில்லை. இதை தவிர்க்க மத்திய அரசு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. அதாவது இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு இந்தியர் அட்டை வைத்திருப்போருக்காக 'விரைவான குடியேற்றம் - நம்பகமான பயணி திட்டம்' இன்று முதல் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், கொச்சி, ஆமதாபாத் ஆகிய விமான நிலையங்களில் அமலுக்கு வந்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றாக டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் திகழ்கிறது. இந்த விமான நிலையத்தில் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி முதல் புறப்பாடு மற்றும் வருகையின் போது பயணிகள் எளிதாக செல்லும் வகையில் புதிய ஃபாஸ்ட்-ட்ராக் இமிக்ரேஷன் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

இந்த திட்டப்படி 'முன் சரிபார்க்கப்பட்ட' விமானப் பயணிகள் எளிதாக விமான நிலையத்திற்குள் சோதனையின் போது நுழைய முடிகிறது. அதேபோல் சோதனைகள் முடிந்து மிக வேகமாக வெளியேற முடிகிறது. இதற்காக பயோமெட்ரிக்ஸ் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. இதுபற்றி மத்திய அரசு அதிகாரிகள் அப்போது கூறும் போது, "சர்வதேச பயணிகளின் விருப்பமான முக்கியமான நாடாக இந்தியா மாறி வருகிறது. எனவே இந்தியா வம் பயணிகளின் பயண அனுபவம் தடைகள் ஏதுவும் இல்லாத இருக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது..
மேலும் அவர்களின் பயண அனுபவத்தை சிறப்பானதாக மாற்றுவதற்காக மத்திய அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி 'தகுதியான பயணிகள்', இ-கேட் மூலம் எளிதாகவும் விரைவாகவும் வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் வழக்கமான நீண்ட வரிசைகளைத் தவிர்க்க முடியும். விமானங்களில் வரும் 'சரிபார்க்கப்பட்ட' இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்திய குடிமக்கள் (OCI) ஆகியோர் ஃபாஸ்ட்-ட்ராக் இமிக்ரேஷன் சிஸ்டம் மூலம் சில நொடிகளில் விமான நிலையங்களை விட்டு வெளியேற முடியும்" என்று கூறினார்கள்.
இதனிடையே இந்த திட்டம் மேலும் 7 விமான நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத், கொச்சி, ஆமதாபாத் ஆகிய விமான நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) முதல் இது அமலுக்கு வருவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி வெளிநாடு பயணம் செய்யும் பயணிகள் விமான நிலையங்களில் குடியேற்ற நடைமுறையை முடிப்பதற்கு சென்னை விமான நிலையத்தில் இனி அதிக நேரத்தை செலவிட தேவையில்லை.
அது சரி, புதிய ஃபாஸ்ட்-ட்ராக் இமிக்ரேஷன் சிஸ்டம் என்றால் என்ன: இதனை ஆங்கிலத்தில் FTI-TTP திட்டம் என்று அழைப்பார்கள். டெல்லி விமான நிலையத்தில் வெற்றிகரமாக செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஜூலை மாத நிலவரப்படி 18,400 நபர்கள் (இந்திய பாஸ்போர்ட் மற்றும் OCI அட்டை வைத்திருப்பவர்கள்) பதிவு செய்திருந்தார்கள். இப்போது எண்ணிக்கை கூடியிருக்கும். இந்த திட்டத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே எளிதாக இமிக்ரேஷன் சோதனையை செய்து வெளியேற முடியும். இந்த FTI-TTP திட்டம் ஆன்லைனில் செயல்படுத்தப்படுகிறது.
பயோமெட்ரிக்ஸ் கட்டாயம்: புதிய ஃபாஸ்ட்-ட்ராக் இமிக்ரேஷன் சிஸ்டம் திட்டத்தில் இணையும் பயணிகள், தேவையான சரிபார்ப்புகளுக்கு பிறகு, இ-கேட்கள் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். இதில் தேவையான அனைத்து சரிபார்ப்பு நடைமுறைகளுக்கு பின்னரே, குறிப்பிட்ட பயணிகள் 'நம்பகமான பயணிகளின்' என்ற 'வொயிட் லிஸ்டில்' சேர்க்கப்படுவார்கள். இதன்படி இ-கேட்கள் வழியாகச் செல்லும் 'நம்பகமான பயணி'களின் பயோமெட்ரிக்ஸ் ஏற்கனவே வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அல்லது விமான நிலையங்களில் சேகரிக்கப்பட்டிருக்கும்.
இ-கேட் எப்படி வேலை செயல்படும்: விமான நிலையங்கள் வந்ததும், பதிவு செய்யப்பட்ட பயணிகள் இ-கேட்களை அடையும் போது, அவர்கள் தங்கள் விமானத்தின் விவரங்களைப் பெற விமான நிறுவனங்கள் வழங்கிய போர்டிங் பாஸை ஸ்கேன் செய்வார்கள். பின்னர் கடவுச்சீட்டும் ஸ்கேன் செய்யப்பட்டு, பயணிகளின் பயோமெட்ரிக்ஸ் அங்கீகரிக்கப்படும். பின்னர் பயணியின் அடையாளம் கண்டறியப்பட்டு, பயோமெட்ரிக் அங்கீகாரம் செய்யப்பட்டவுடன், இ-கேட் தானாகவே திறக்கப்படும். இதன் மூலம் விரைவாக பயணிகள் செல்ல முடியும்.
இதற்கு எப்படி விண்ணப்பிப்பது: இதற்கு தகுதியான நபர்கள் இந்த திட்டம் https://ftittp.mha.gov.in என்ற இணையதளம் மூலம் செயல்படுத்தப்படும். இதை பயன்படுத்த விரும்பும் பயணிகள் தங்கள் பயோமெட்ரிக் விவரங்கள் உள்பட அனைத்து தரவுகளையும் மேற்கொண்ட இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். இந்த இணையதளத்தில் தேவையான விவரங்களை அளிக்கும் போது, ஒவ்வொன்றாக சரியாக வழங்க வேண்டும். அப்படி வழங்கப்படும் விவரங்களை அனைத்தையும், இமிக்ரேசன் அலுவலகத்தால் சரிபார்க்கப்படும். பின்னர் இமிக்ரேசன் அதிகாரிகளால் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, சர்வதேச விமான நிலையங்கள் அல்லது அருகிலுள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தில் அவர்களின் பயோமெட்ரிக்ஸை வழங்க வேண்டும் என்று அவருக்கு இமிக்ரேஷன் அலுவலகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்படும். அங்கு சென்று பயோமெட்ரிக்கை பதிவு செய்ய வேண்டும். அப்படி நடந்து விட்டால் நம்பகமான பயணிகள் லிஸ்டில் வந்து விடுவார்கள்.. இதன் மூலம் எளிதாக விமான நிலையங்களில் ஒரு சில நொடிகளில் வெளியேற முடியும்.
ஐந்து ஆண்டுகள் செல்லும்: இந்த எஃப்டிஐ பதிவு (நம்பகமான பயணி என்பது) அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் அல்லது பாஸ்போர்ட் செல்லுபடியாகும் வரை என எது முதலில் வருகிறதோ, அது வரை செல்லுபடியாகும். பயோமெட்ரிக்ஸ் வழங்குவது கட்டாயம்.. FTI-TTP க்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்காவது பாஸ்போர்ட் செல்லுபடியாகும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்: இமிக்ரேஷன் செயல்முறைகளில் மனிதர்களின் தலையீட்டைக் குறைக்கும் இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டத்தில் இந்திய குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் அடுத்த கட்டத்தில் வெளிநாட்டினர் சேர்க்கப்பட உள்ளார்கள். சந்தேகங்களை [email protected] என்ற முகவரியில் கேட்டு அறியலாம்.












Click it and Unblock the Notifications