அயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்
Recommended Video
டெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய இட விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில், நடைபெற்றுவந்த விசாரணை 40வது நாளான இன்றுடன் நிறைவடைந்தது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
தலைமை நீதிபதி அடுத்த மாதம் 17ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளதால், அதற்கு முன்பாக, அதாவது இன்றிலிருந்து சுமார் ஒரு மாதத்திற்குள், எப்போது வேண்டுமானாலும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வெளியாகும் வாய்ப்பு, பிரகாசமாக உள்ளது.

இரு மத விவகாரம்
இது இரு மதங்கள் தொடர்பான பிரச்சினையாக மாறிவிட்டது. இந்த வழக்கு விசாரணை மற்றும் தீர்ப்பு ஆகியவற்றை ஒட்டி நாடு முழுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அயோத்தியில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் மக்களை தூண்டும் வகையில் செய்திகள் வெளியாகி விடக்கூடாது என்பதற்காக ஊடகங்களுக்கும் சில கட்டுப்பாடுகளை செய்தி ஒளிபரப்பு தர நிர்ணய ஆணையம் பிறப்பித்துள்ளது.

கட்டுப்பாடுகள்
இதுதொடர்பாக, செய்தி ஒளிபரப்பு தர நிர்ணய ஆணையம், வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நீதிமன்ற நடவடிக்கைகளை ஊடகங்கள் ஊகிக்க வேண்டாம், செய்திகளின் உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள், பாபர் மசூதி இடிக்கப்பட்ட காட்சிகளைப் பயன்படுத்த வேண்டாம், யாருடைய தரப்பு கொண்டாட்டங்களையும் ஒளிபரப்ப வேண்டாம், விவாத நிகழ்ச்சிகளில், மதம் சார்ந்த தீவிரத்துவம் வாய்ந்த கருத்துக்களை ஒளிபரப்பக் கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுக்க அலர்ட்
அயோத்தி தொடர்பான தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாக கூடும் என்றபோதிலும், தீர்ப்பு வருவதற்கு சில நாட்கள் முன்பாக, உச்சநீதிமன்றத்தில் கால அட்டவணையில் அது தொடர்பான விவரம் இடம் பெற்றிருக்கும். அதன் அடிப்படையில், தீர்ப்பு நாளில், நாடு முழுக்கவே விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

அவசர சட்டம்
ஒருவேளை இருதரப்புக்குமே, தீர்ப்பில் உடன்பாடில்லை என்றால், அதன் பிறகு இந்த விவகாரம் மத்திய அரசின் கைக்குச் செல்லும். மத்திய அரசு அவசர சட்டத்தை பிறப்பித்தது, தனது முடிவை செயல்படுத்த முடியும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்று பாஜக தலைவர்கள் பலரும் திரும்பத் திரும்ப கூறி வருவதை பார்த்தால், ஒருவேளை உச்ச நீதிமன்ற தீர்ப்பில் இருதரப்புக்கும் உடன்பாடு ஏற்படாதபட்சத்தில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எனவே அனைவரின் கவனமும் தீர்ப்பின் மீது சென்றுள்ளது












Click it and Unblock the Notifications