Sterlite Issue: ஸ்டெர்லைட் ஆலை விதிமுறைகளை மீறவில்லை.. சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா வாதம்
டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் தொடர்ந்த வழக்கு நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்ததையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில், பசுமை தீர்ப்பாயத்திற்கு இந்த வழக்கை விசாரிக்க அதிகாரம் இல்லை என கூறி தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ஆலை விதிகளை மீறியதாக அரசு குற்றம்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது; தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு ஸ்டெர்லைட் வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளது என்று ஸ்டெர்லைட் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை பிப்.7ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.