பஹல்காம் தாக்குதலில் லஷ்கர் தீவிரவாதிக்கு தொடர்பு.. அம்பலப்படுத்திய என்ஐஏ.. பகீர் ரிப்போர்ட்
டெல்லி: காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் மிக மோசமான ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், இதில் பாகிஸ்தானுக்கு நேரடியாகத் தொடர்பு இருப்பதை என்ஐஏ அம்பலப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் லஷ்கர் அமைப்பின் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பின் தலைவருக்கு இது பங்கு இருப்பது தெரிய வந்துள்ளது.
காஷ்மீரில் கடந்த ஏப்ரல் மாதம் மிக மோசமான ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஊடுருவிய தீவிரவாதிகள் அங்கிருந்த அப்பாவி சுற்றுலாப் பயணிகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த மோசமான சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்தனர். காஷ்மீரில் சமீப ஆண்டுகளில் நடந்த மிகப் பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.

என்ஐஏ விசாரணையில் அம்பலம்
இந்த மோசமான தாக்குதல் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் இப்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கும் தங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் மறுத்து வந்த நிலையில், பாகிஸ்தானுக்கு இருக்கும் நேரடித் தொடர்பைத் தேசியப் புலனாய்வு முகமை அம்பலப்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு, பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் தலைவன் சஜித் ஸைஃபுல்லா ஜுட்டே என்பவரே முக்கிய சதிகாரன் என என்ஐஏ அறிவித்துள்ளது. சஜித் உபா சட்டத்தின் கீழ் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை பிடிக்க உதவுவோருக்கு ₹10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள்
கடந்த ஏப்ரல் மாதம் இந்தத் தாக்குதல் நடந்த நிலையில், தேசியப் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். எட்டு மாத விரிவான விசாரணைக்குப் பின் இப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலை நடத்திய சுலைமானி ஷா, ஹம்சா ஆப்கானி, ஜிப்ரான் ஆகிய மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளும் ஜூலை 28ல் 'ஆபரேஷன் மஹாதேவ்' நடவடிக்கையின்போது டச்சிகம் பகுதியில் கொல்லப்பட்டதாகவும் இந்தக் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
உடந்தை
ஜம்முவில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்தச் சம்பவத்தில் பஷீர் அகமது ஜோதர், பர்வேஸ் அகமது ஜோதர், முகமது யூசுப் கட்டாரி உட்பட ஆறு உள்ளூர் காஷ்மீர் மக்கள் தீவிரவாதிகளுக்கு உடந்தையாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பயங்கரவாதிகளுக்கு உணவு, தளவாட உதவிகளை வழங்கியுள்ளனர். குறிப்பாக பஷீர் என்பவன் தாக்குதலுக்கு முந்தைய நாள் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்துள்ளான். மேலும், யூசுப் காட்டிற்குள் பாதை கண்டுபிடிக்க உதவி இருக்கிறான்.
கடந்த ஏழு மாதங்களாகச் சுமார் 1000+ பேரிடம் விசாரித்து என்ஐஏ இந்தக் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் மீது உபா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
என்ன நடந்தது
பஹல்காம் தாக்குதலுக்கு எதிராகவே இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. இதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்தியா மீது பாகிஸ்தான் பதிலடி கொடுக்க முயன்றது. இருப்பினும், இந்தியா அதைச் சமாளித்துத் திரும்பித் தாக்கியதில் பாகிஸ்தான் திணறியது. தாக்குதல் வேண்டாம் என பாகிஸ்தான் சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications