சீமானின் 'தோழர்' காஷ்மீர் யாசின் மாலிக்குக்கு தூக்கு? என்.ஐ.ஏ. மனு மீது பதிலளிக்க ஹைகோர்ட் நோட்டீஸ்!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் தனிநாடு கோரும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி JKLF தலைவர் யாசின் மாலிக்குக்கு தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA) டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இம்மனு மீது பதிலளிக்க யாசின் மாலிக்குக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்தியாவில் இருந்து ஜம்மு காஷ்மீர் பகுதிகளைப் பிரித்து தனிநாடு கோரும் கொள்கையை கொண்டது ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி.. இதன் தலைவர் யாசின் மாலிக். இந்தியாவில் தேசிய இனங்கள் சுயநிர்ணய உரிமை பெற்றதாக இருக்க வேண்டும் என்ற கொள்கையையும் ஆதரிப்பவர் யாசின் மாலிக். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு குரல் கொடுப்பவர் என்பதால் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், யாசின் மாலிக்கை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தது சர்ச்சையானது. கடலூரில் 2013-ல் நடைபெற்ற நாம் தமிழர் மாநாட்டில் சீமான், யாசின் மாலிக் இணைந்து பங்கேற்றதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் சீமான் இதனை நியாயப்படுத்தி இருந்தார்.

மேலும் பாகிஸ்தானுக்கு சென்ற யாசின் மாலிக், இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதி ஹபீஸ் சையது பங்கேற்ற போராட்டத்திலும் பங்கேற்றார். இதுவும் மிகப் பெரும் பிரச்சனையாக வெடித்தது. இந்நிலையில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக 2019-ம் ஆண்டு யாசின் மாலிக் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA) நீதிமன்றம் கடந்த ஆண்டு மே மாதம் யாசின் மாலிக்கை குற்றவாளி என தீர்ப்பளித்து, ஆயுள் தண்டனை விதித்தது. யாசின் மாலிக்குக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக ஜம்மு காஷ்மீரில் பெரும் போராட்டங்கள் வெடித்தன.

இந்நிலையில் யாசின் மாலிக்குக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு ஏஜென்சி கடந்த 26-ந் தேதி மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீது யாசின் மாலிக் பதிலளிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications