திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் களமிறக்கப்படுகிறாரா நிர்மலா சீதாராமன்?
டெல்லி: திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் நிர்மலா சீதாராமன் களமிறக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தங்கள் ஆட்சியை தக்க வைத்து கொள்ள போராடி வருகிறது. அதே போல் அந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகளும் பல்வேறு வியூகங்களையும் ஹோம் வொர்க்களையும் செய்து வருகின்றன.
இந்த நிலையில் கேரளத்தில் உள்ள சபரிமலையில் இளம்பெண்கள் செல்ல அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கேரளத்தில் உள்ள பெண்களே சபரிமலைக்கு செல்ல விருப்பம் தெரிவிக்காததால் பாஜக எதிர்ப்பு நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் வெற்றியை வாங்கித் தரும் என பாஜக நம்புகிறது.
மாநில தலைநகர்
அதன்படி திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, திருச்சூர், பாலக்காடு, காசர்கோடு ஆகிய மக்களவை தொகுதிகளில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவே கருதப்படுகிறது. எப்படியாயினும் மாநில தலைநகரில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அங்கு சிறந்த வேட்பாளரை நிறுத்துவது குறித்து பாஜக கட்சி தலைமை ஆலோசனை நடத்தி வருகிறது.
நிறுத்தலாம்
மிசோரம் மாநில ஆளுநர் கும்மணம் ராஜசேகரனை திருவனந்தபுரத்தில் களமிறக்கலாம் என கட்சியின் ஒரு சிலர் கருதுகின்றனர். எனினும் இறுதி முடிவை கட்சி தலைமைதான் எடுக்கும். கும்மணம் இல்லாவிட்டால் மாநில பாஜக தலைவர் பி எஸ் ஸ்ரீதரன் பிள்ளை அல்லது மாநில பொதுச் செயலாளர் கே சுரேந்திரன் ஆகியோரில் ஒருவரை திருவனந்தபுரத்தில் நிறுத்தலாம் என கருதப்படுகிறது.
பரிந்துரை
மற்றொரு முக்கிய வேட்பாளர் எம்பி சுரேஷ் கோபி. இந்த நிலையில் கேரளத்தில் பாஜக அலையை உருவாக்க கட்சியின் முக்கிய தலைவரை திருவனந்தபுரத்தில் நிறுத்தலாம் என பாஜக கருதுகிறது. இதனால் நிர்மலா சீதாராமனின் பெயரை கட்சி பரிந்துரை செய்து வருகிறது.
சந்தேகம்
ஆனால் நிர்மலா சீதாராமனோ மாநிலங்களவை பதவியை விட்டுத் தரமாட்டார். எனவே அவர் போட்டியிடுவது சந்தேகம் என்று சிலர் கூறுகின்றனர்.
தீவிர ஆலோசனை
இது போல் மற்ற தொகுதிகளுக்கு யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதில் கட்சியினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனராம். எதுவாக இருந்தாலும் அந்த மாநிலத்தின் கூட்டணிக் கட்சிக்கு இரு தொகுதிகளை ஒதுக்கிவிட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் பின்னர் வெளியிடப்படும் என தெரிகிறது.