அடிமைத்தனத்தின் வெளிப்பாடே சூட்கேஸ்.. அதனால்தான் "பை பை".. விவரிக்கிறார் பொருளாதார ஆலோசகர்
Recommended Video
டெல்லி: வழக்கமாக சூட்கேஸில் கொண்டு செல்லப்படும் பட்ஜெட் , இன்று முதல் முறையாக சிவப்பு நிற உரை பையில் கொண்டு செல்லப்படுகிறது. அடிமைத்தனத்தின் வெளிப்பாடு சூட்கேஸ் என்பதால் இந்த மாற்றம் என மத்திய அரசு தரப்பில் விளக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்றது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் அள்ளி வீசப்பட்ட சலுகைகள் தற்போது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த மே மாதம் 30-ஆம் தேதி பொறுப்பேற்றதிலிருந்தே மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வந்தார்.

பட்ஜெட்
இந்த நிலையில் சிவப்பு நிறத்தில் சேலை அணிந்திருந்த நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை எடுப்பதற்காக நிதி அமைச்சகத்துக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், நிதித் துறை செயலாளர் எஸ் சி கார்க், தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் உள்ளிட்டோருடன் பட்ஜெட்டை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார்.

துணிப்பை
அவர் நாடாளுமன்றத்துக்கு புறப்படுவதற்கு முன்னர் பட்ஜெட் வைத்திருந்த பையை செய்தியாளர்களுக்கு காண்பித்தார். அந்த வகையில் வழக்கமாக சூட்கேஸில் கொண்டு செல்லப்படும் பட்ஜெட், இன்றைய தினம் சிவப்பு நிறத்தினாலான துணிப்பையில் கொண்டு செல்லப்பட்டது.

பொருளாதார ஆலோசகர்
இதுகுறித்து பொருளாதார தலைமை ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் கூறுகையில் துணிப்பை நமது பாரம்பரியம். மேற்கத்திய சிந்தனையின் அடிமைத்தனத்திலிருந்து நாம் வெளியேறுவதை இது குறிக்கிறது என்றார்.

வாசகர்கள்
இதன் மூலம் பல ஆண்டுகளாக பட்ஜெட் சூட்கேஸில் கொண்டு செல்லப்படும் மரபை நிர்மலா சீதாராமன் உடைத்தெறிந்தார். அதே சமயம் அருண் ஜேட்லி, பியூஷ் கோயல் ஆகியோர் ஏன் அடிமைத்தனத்திலிருந்து வெளியே வராமல் சூட்கேஸை பயன்படுத்தினார்கள் என வாசகர்கள் கேட்பதும் காதில் விழாமல் இல்லை.












Click it and Unblock the Notifications