நிதி மசோதா 2025: வரி செலுத்துவோருக்கு பெரும் நிவாரணம்! அமைச்சர் நிர்மலா விளக்கம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதி மசோதா, நேர்மையாக வரி செலுத்துவோருக்கு பெரும் சலுகைகளை கொடுக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மேலும் நடுத்தர மக்களின் பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக இது போன்ற சலுகைகளை மத்திய அரசு வழங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிதிமசோதா நிறைவேற்றுவதற்கு முன்பு அது குறித்த விளக்கத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்திருந்தார்.
அவர் பேசுகையில் புதிய வருமான வரி மசோதா அடுத்த மழைக் கால கூட்டத் தொடரில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த மசோதா கடந்த 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதி மசோதா வரி செலுத்துவோரை ஊக்கப்படுத்துவதற்காகவும் கவுரவிப்பதற்காகவும் முன்னெப்போதும் இல்லாத சலுகைகளையும் நிவாரணத்தையும் அளிக்கிறது.
தொழிற்துறை உற்பத்தி பொருட்களுக்கான சுங்க வரி விகிதத்தை பட்ஜெட்டில் நீக்கியுள்ளோம். இதன் மூலம் பொது மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகத்தான். கடந்த 1ஆம் தேதி தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பை ஆண்டுக்கு ரூ 12 லட்சமாக மத்திய அரசு உயர்த்தியது.
ஆண்டு வருமானம் 12 லட்சத்தை தாண்டுவோருக்கு வருமான வரி சட்டத்தின் கீழ் சிறிய அளவிலான நிவாரணம் கிடைக்கிறது. பட்ஜெட்டில் மொத்த செலவினம் ரூ 50.65 லட்சம் கோடியாகும். இது நிகழாண்டை காட்டிலும் 7.4 சதவீதம் அதிகமாகும்.
ஏற்றுமதிக்கான பொருட்களை உற்பத்தி செய்ய சில மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை 6 மாதத்தில் இருந்து ஓராண்டாக உயர்த்தியுள்ளோம். எந்த பொருட்களின் மீதும் வரியை உயர்த்தவில்லை. அரிய நோய்களுக்கான மருந்துகளை இறக்குமதி செய்யும் நோயாளிகளுக்கு ஜஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோயில்களில் இருந்து வரும் பிரசாதங்களுக்கும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிரசாதங்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் உணவு பொருட்களின் மீதான ஜிஎஸ்டியைக் குறைப்பது குறித்தும் அரசு பரிசீலனை செய்து வருகிறது.
ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக எந்த மாநிலங்களுக்கும் பாக்கி இல்லை. விதைகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது. உரங்களுக்கு மட்டும் 5 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்த விளக்கத்திற்கு பிறகு மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபாவிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதும் 2025- 2026 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் செயல்பாடுகள் முடிவடையும்.












Click it and Unblock the Notifications