டெல்லியில் ஜிஎஸ்டி குறைப்பு மீட்டிங்கின் போது.. நிர்மலா சீதாராமன் சொன்ன ஆச்சரியமான உண்மை
டெல்லி: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ஜிஎஸ்டி குறைப்பு நடைபெற்றுள்ளது. மேற்கு வங்கம், கேரளா, பஞ்சாப் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் ஒப்புதல் அளித்தன. இந்த வரி குறைப்புக்கு எந்த எதிர்ப்பும் எழவில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணம் மிகவும் எளிமையானது. நடுத்தர குடும்பங்களுக்கு மிகப் பெரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி கவுன்சிலால் தீர்மானிக்கப்பட்டு, மத்திய அரசால் வரும் 22-ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரி சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது வரை நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி வரி விகிதங்கள், 40% வரிப் பிரிவு இல்லாமல் 5%, 18% என இரட்டை அடுக்குகளாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பால், ரொட்டி, பென்சில், நோட்டு புத்தகங்கள், மருந்துகள், சோப்பு, நாப்கின், வெண்ணெய், காலணிகள், ஆடைகள், உரம், டி.வி., டிராக்டர், கார்கள், மோட்டார் சைக்கிள் என ஏராளமான பொருட்களின் விலை குறைகிறது.

உற்பத்தி அதிகரிக்கும்
இதனால், அதிக வருவாய் ஈட்டி வந்த மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், கேரளா உள்பட எல்லா மாநில அரசுகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் மத்திய அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் போது, மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்து மீண்டும் வருவாய் அரசுக்கு அதிகரிக்கும். மக்கள் ஒரு பொருள் வாங்கும் இடத்தில் இரண்டு பொருள் வாங்கக்கூடும். அதேபோல் பல்வேறு இடங்களில் மக்கள் பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டுவார்கள் என்பதால், உற்பத்தி அதிகரித்து வேலைவாய்ப்பு பெருகும். மக்களின் பொருளாதார நிலை உயரும். எனவே பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு பெருக்கம் ஆகியவற்றுக்கும் இந்த சீர்திருத்தம் மிக அவசியமாக பார்க்கப்படுகிறது.
நிர்மலா சீதாராமன்
இந்நிலையில் ஜிஎஸ்டி விகித மாற்றம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "ஜிஎஸ்டி அமல்படுத்திய 8 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி குறைப்பு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி அறிவித்தபடி இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது
மாநிலங்களுக்கு இழப்பு உண்மை தான்
அதேநேரத்தில் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்த, வருவாய் இழப்பு குறித்த மாநிலங்களின் கவலைகள் நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது, எனினும் ஜிஎஸ்டி வசூல் என்பது மத்திய, மாநில அரசுகளை சார்ந்தது. இதில் மாநில அரசு பாதிக்கப்படுகிறது என்றால், மத்திய அரசும் பாதிக்கப்படும் என்பதே எதார்த்த உண்மை. ஆனால், சாதாரண மக்கள் இதில் பயன்பட வேண்டும், அவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கம்" இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
நுகர்வோர்கள் பலன் அடைய வேண்டும்
ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், "ஜி.எஸ்.டி.யில் கொண்டு வரப்பட்டுள்ள சீர்திருத்தம், கடந்த 11 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளின் பலன் ஆகும். நாடு விடுதலை அடைந்தபின் செய்யப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தம். இயற்கையிலேயே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த முயற்சி மருந்துத்துறையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. விவசாயம் முதல் நமது சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை வரை பல துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த போகிறது.இதற்கான பலனை நாட்டின் ஒவ்வொரு துறையினரும், ஒவ்வொரு நுகர்வோரும் அனுபவிக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் தேவை அதிகரித்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். எனவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் விற்பனையை பெருமளவில் ஊக்குவிக்க வேண்டும்.
30 டிரில்லியன் அமெரிக்க டாலர்
ஜி.எஸ்.டி.யில் ஏற்படுத்தப்பட்ட இந்த சீர்திருத்தமானது, 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான பயணத்தில் வரும் மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் முக்கிய பங்கு வகிக்கும். நாடு அடுத்த 2 ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறி விடும். 2047-ம் ஆண்டுக்குள் 4 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தில் இருந்து 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறி விடும்.
பிரதமரின் தீபாவளி பரிசு
பிரதமர் மோடி எப்போதும் தன்னுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். நமது அன்றாடத் தேவைகளில் கிட்டத்தட்ட அனைத்துப் பொருட்களிலும் வரிகளைக் குறைப்பதன் மூலம் நுகர்வோர் மிகப்பெரிய அளவில் பயனடைய போகிறார்கள். ஜி.எஸ்.டி. குறைத்ததுடன், செயல்முறை மற்றும் நடைமுறைகளில் செய்யப்படும் மாற்றங்களும் வணிகம் செய்வதை எளிதாக்கியுள்ளது. வரி விகிதங்கள் குறைவதால் தேவை மற்றும் தொழில்துறையின் வளர்ச்சியை ஆதரிக்கும். நாட்டில் செயல்பாட்டின் அளவு வேகமாக வளரும். அதிக தேவை அதிக முதலீடு, அதிக வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்க போகிறது. பிரதமரின் தீபாவளி பரிசு வாழ்க்கையை எளிதாக்கும். 140 கோடி குடிமக்களுக்கு சிறந்த வாழ்க்கைத்தரத்தை வழங்கும்.
பியூஸ் கோயல் கருத்து
நாடு வேகமாக வளரும் பொருளாதாராக இருந்தபோதும் காங்கிரஸ் கட்சி எதிர்மறைத்தன்மையை தொடர்ந்து பரப்பி வருகிறது. அதன் எதிர்மறைத்தன்மை காரணமாகவே அந்த கட்சி தற்போது இந்த நிலையில் உள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.8 சதவீத வளர்ச்சியுடன் உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இருப்பது மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்துக்கான விஷயம் என்பதை ராகுல் காந்தி புரிந்து கொள்ளாதது சோகம் ஆகும். உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இருந்தபோதும், இந்தியாவை செத்துப்போன பொருளாதாரம் என ராகுல் காந்தி அழைக்கிறார். இதுதான் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் எதிர்மறை எண்ணமாக இருக்கிறது. இந்த மாதிரி எதிர்மறை நிலையை கண்டிக்கிறேன்" இவ்வாறு பியூஸ் கோயல் கூறினார்.












Click it and Unblock the Notifications