எங்களை எல்லாம் கொரோனா வைரஸ் தாக்காது.. காலபைரவன் இருக்கார்.. பரமசிவன் பாதுகாக்கிறார்.. நித்தி அதிரடி
டெல்லி: கொரோனா வைரசால் நாங்கள் பாதிக்கப்படவில்லை. இது எதிர்காலத்திலும் எங்களுக்கு வராது. ஏனென்றால் பரமசிவன் எங்களைப் பாதுகாக்கிறார் என சாமியார் நித்யானந்தா கூறியுள்ளார்.
பெங்களூரு பிடரியில் ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் நித்யானாந்தா பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். இவர் மீது பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது, கடத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவர் அண்மையில் தன்னுடைய பெண் சீடர்களுடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அவர் நேராக தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள ஈக்வேடார் நாட்டுக்கு சென்றவர் அங்கிருந்து எந்த நாட்டுக்கு சென்றார் என்பது தெளிவாக தெரியவில்லை.
கொரோனா வைரஸ்.. திருச்சியில் இருந்து செல்லும் விமான சேவைகளில் அதிரடி மாற்றம்.. சில சேவைகள் ரத்து
இதனிடையே அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஏதோ ஒரு தீவை விலைக்கு வாங்க கைலாசா நாட்டை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அங்குதான் அவர் தனது சீடர்களுடன் வசிப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அவர் தான் வாங்கிய தீவுக்கு கைலாசா நாடு என்று பெயரிட்டதுடன் அதற்கு அதிபராக தன்னையே அறிவித்துக் கொண்டார். ஆனால் அவர்து கைலாசா நாடு எங்கிருக்கிறது என்பது இன்னமும் கூகுளுக்கே தெரியவில்லை. அவர் தினமும் யூடியூப்பில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வருகிறார். டுவிட்டரில் அன்றாடம் கருத்து தெரிவித்து வருகிறார்.
இதற்கிடையே கடத்தல் வழக்கில் குஜராத் போலீசார் நித்யானந்தாவை தீவிரமாக தேடி வருகிறார்கள். இதேபோல் கர்நாடக போலீசாரும் பலாத்கார வழக்கில் நித்யானந்தாவை கைது செய்ய தேடி வருகிறார்கள். இதனால் தான் எங்கு இருக்கிறேன் என்பதை நித்யானந்தா இதுவரை தெரிவிக்கவில்லை. அவரை பிடிக்க சர்வதேச போலீஸ் உதவியை போலீசார் நாடி உள்ளனர்.. இதையடுத்து புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து நித்யானந்தாவை தேடும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் சாமியார் நித்யானந்தா நேற்று தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கொரோனா வைரஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். "கொரோனா வைரசால் நாங்கள் பாதிக்கப்படவில்லை. இது எதிர்காலத்திலும் எங்களுக்கு வராது. ஏனென்றால் பரமசிவன் எங்களைப் பாதுகாக்கிறார். காலபைரவர் எங்களுக்கு பாதுகாவலாக உள்ளார்" என்றார்.