நிதி ஆயோக் கூட்டம் நிறைவு.. ஸ்டாலின் உள்பட மாநில முதல்வர்கள் பங்கேற்பு.. யார் யார் புறக்கணிப்பு
டெல்லி: 10 வது நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச முதல்வர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், புதுவை முதல்வர் ரங்கசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
திட்ட கமிஷனுக்கு மாற்றாக கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது நிதி ஆயோக். தேசிய வளர்ச்சியில் மாநிலங்களிடையே பங்கு, தீவிர ஈடுபாடு, கூட்டாட்சியை வளர்ப்பது, அரசின் திட்டங்கள் மற்றும் முன் முயற்சிகளை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துதல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக இந்த நிதி ஆயோக் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

10 வது நிதி ஆயோக் கூட்டம்
அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் இந்த நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. நிதி ஆயோக்கின் தலைவராக இருக்கும் பிரதமர் மோடி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி நடப்பு ஆண்டில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம் இன்று நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் கூட்டம் தொடங்கி மாலையில் நிறைவடைந்தது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்த 10-வது நிதி ஆயோக் கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச முதல்வர்கள், துணை நிலை கவர்னர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று நிதி ஆயோக் கூட்டத்தை கடந்த ஆண்டு பங்கேற்காமல் புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின், இந்த ஆண்டு கூட்டத்தில் பங்கேற்றார்.
நிதி ஒதுக்குவது குறித்து
தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்காத விவகாரம் குறித்து கூட்டத்தில் ஸ்டாலின் கேள்வி எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, மத்திய அரசின் வரி வருவாயில் 50 சதவிகிதம் மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தற்போது மாநிலங்களுக்கு 33.16% மட்டுமே மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வாக அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலங்களுக்கு வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்ட 41 சதவிகித நிதிப்பகிர்வு வழங்கப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சுகு (காங்கிரஸ்) ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் முதல் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆவார்.
மையக் கருத்து என்ன
தெலுங்கானா நிர்ணயித்த இலக்குகளை 2047-க்குள் எட்டும் சிறப்பு அறிக்கையை தாக்கல் செய்து, இதற்காக மத்திய அரசின் நிதி உதவியை கோருவார் என்றும் சொல்லப்பட்டது. கடந்த ஆண்டு, நிதி ஆயோக் கூட்டத்தில், 20 மாநில முதல்வர்களும் 6 யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்களும் கலந்துகொண்டனர்.
10 ஆவது நிதி ஆயோக் கூட்டத்தின் மையக் கருத்தாக 'வளா்ந்த பாரதத்துக்கான இந்திய அணி 2047' என்ற தீம் முன்னிறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வளா்ச்சியை மையமாக வைத்து ஒருங்கிணைந்த நீண்ட காலத் திட்டங்களை மாநிலங்கள் வகுக்க வேண்டும் என்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படுவதாக கூறப்பட்டது.
யார் யார் பங்கேற்கவில்லை
பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா அண்மையில் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் ஆக்ஷனுக்கு பிறகாக பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் பங்கேற்கும் முதல் கூட்டம் இதுவாகும். இதனால், இந்தக் கூட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா பங்கேற்கவில்லை. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என சித்தராமையா தரப்பில் சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், புதுவை முதல்வர் ரங்கசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரும் பங்கேற்கவில்லை. இவர்கள் ஏன் பங்கேற்கவில்லை என்ற காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. ஏனைய அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள், நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications