அமித் ஷாவை நீக்குங்கள்.. கட்கரியை துணை பிரதமராக்குங்கள்.. பாஜகவில் எழுந்தது கலகக் குரல்!
மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை துணை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சங்பிரியா கவுதம் கோரிக்கை வைத்துள்ளார்.
டெல்லி: மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை துணை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சங்பிரியா கவுதம் கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பாஜக கட்சிக்குள் உருவாகி இருந்த சிறிய பூசல் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்துள்ளது. பாஜகவில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பிரதமர் மோடிக்கு பதிலாக 2019 தேர்தலில் முன்னிறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.
ஐந்து மாநில தேர்தல் உட்பட பாஜகவின் தொடர் தேர்தல் தோல்விகளால் தற்போது அந்த கட்சிக்குள் இரண்டு அணிகள் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் சங்பிரியா கவுதம் பரபரப்பு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
என்ன கருத்து
பாஜகவை சேர்ந்த 88 வயது நிரம்பிய மூத்த தலைவர் சங்பிரியா கவுதம் இதுகுறித்து தெரிவித்த கருத்தில், பிரதமர் மோடியின் அலை 2014 போலவே 2019ல் இருக்காது. 2014ல் வென்றது போல 2019ல் பாஜகவால் எளிதாக வெல்ல முடியாது. இந்தியாவில் பாஜகவிற்கு எதிராக பெரிய மனநிலை நிலவி வருகிறது. அதை கட்சி சரி செய்ய வேண்டும்.
துணை பிரதமர்
இதனால் துணை பிரதமராக நிதின் கட்கரியை நியமிக்க வேண்டும். அவருக்குத்தான் நிறைய திறமை இருக்கிறது. நிதின் கட்கரி துணை பிரதமராக நியமிக்கப்படுவதே கட்சிக்கு நல்லது. அவரை கட்சியில் முன்னிறுத்தினால்தான் அடுத்த தேர்தலில் பாஜக வெற்றிபெற முடியும். இல்லையென்றால் சொற்ப இடங்களே கிடைக்கும்.
அமித் ஷாவிற்கு எதிராக கருத்து
பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை தேர்தல் பணியில் களமிறக்க வேண்டும். அவர் தலைவராக இருக்க கூடாது. அவருக்கு பதில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைவராக நியமிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பாஜக மக்களின் ஆதரவை பெற முடியும்.
ஆதித்யநாத்
முக்கியமாக உத்தர பிரதேச முதல்வரை உடனே மாற்ற வேண்டும். யோகி ஆதித்யநாத்தை கோவில் பணிகள் செய்ய அனுப்ப வேண்டும். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மேற்பார்வையில் உத்தர பிரதேசத்தில் ஆட்சி நடக்க வேண்டும் என்று சங்பிரியா கோரிக்கை வைத்துள்ளார். அவரின் இந்த கோரிக்கை பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.