தேசிய நெடுஞ்சாலை சுங்க கட்டணத்தில் சலுகை அளிக்க மத்திய அரசு முடிவு.. நிதின் கட்காரி அறிவிப்பு
டெல்லி: சாலை உள்கட்டமைப்புக்காக மத்திய அரசு அதிகம் செலவிடுவதால் சுங்கக்கட்டணம் அவசியம் என்று கூறிய மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, 4 வழிச்சாலைகளில் மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கிறோம் என்றும் இருவழிச்சாலைகளில் வசூலிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார். நெடுஞ்சாலை சுங்கக்கட்டணத்தில் நியாயமான சலுகை வழங்கும் வகையில் விரைவில் புதிய கொள்கை வெளியிடப்படும் என்றும் கூறினார்.
சுங்கச்சாவடிகள் விவகாரத்தில் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அதிக கட்டணம் வசூலிப்பு, தூரத்தில் அடுத்தடுத்து சுங்கச்சாவடிகள், வேலைகளை முடிக்காமலேயே சுங்கச்சாவடிகளை திறந்து கட்டணம் வசூலிப்பது, சுங்க கட்டணம் வசூலித்தும் தரமற்றதாக சாலைகளை பராமரிப்பது போன்ற விவகாரங்கள் நாடு முழுவதும் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.இது பற்றி கடந்த மாதம் செய்தியாளர்களின் கேள்விக்கு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறும் போது, "தேசிய நெடுஞ்சாலைகளில் ஒரே மாதிரியான சுங்க கொள்கையை அமல்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். வாகன ஓட்டிகள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு அது நிச்சயமாக தீர்வாக அமையும். செயற்கைக்கோள் கண்காணிப்புடன், தேசிய நெடுஞ்சாலைகளில் பயண தூரத்துக்கு ஏற்ப சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்திருக்கிறோம். அந்த திட்டம் வந்த பின்னர், சுங்கச்சாவடிகளுக்கு வேலை இருக்காது.
சமூக வலைத்தளங்களில் வாகன ஓட்டிகள் தெரிவிக்கும் புகார்களை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தீவிரமாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது, தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கும் மொத்த போக்குவரத்தில் தனியார் கார்களின் பங்கு 60 சதவீதம் ஆகும். ஆனால் அவற்றின் மூலம் கிடைக்கும் சுங்க வருவாய் 20 முதல் 26 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது.
கடந்த 2020-2021 நிதியாண்டில், நாள் ஒன்றுக்கு 37 கி.மீ. தூரம் நெடுஞ்சாலை அமைத்து நெடுஞ்சாலை அமைச்சகம் சாதனை படைத்தது. நடப்பு நிதியாண்டில் அந்த சாதனையை முறியடிக்க உள்ளோம்.நடப்பு நிதியாண்டில் இதுவரை சுமார் 7 ஆயிரம் கி.மீ. தூர நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில், 13 ஆயிரம் கி.மீ. தூர நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும். 'பாரத்மாலா' திட்டத்தின் கீழ், ரூ.1,000 கோடிக்கு மேற்பட்ட மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டி உள்ளது. ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை மந்திரிசபை ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம். ஒப்புதல் கிடைத்தவுடன், அப்பணிகளை தொடங்குவோம் என்று கூறினார்.
இதனிடையே நேற்று நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் நெடுஞ்சாலை சுங்க கட்டணம் தொடர்பாக நேற்று உறுப்பினர்கள் பல்வேறு கேள்வி எழுப்பினார்கள். இந்த கேள்விகளுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், "தற்போது நாடு முழுவதும் சுங்கக்கட்டண வசூல் அதிகரித்து உள்ளது. கடந்த 2023-24-ம் ஆண்டில் ரூ.64,809.86 கோடி வசூலாகி இருக்கிறது. இது முந்தைய ஆண்டை விட 35 சதவீதம் அதிகம் ஆகும். அதேநேரம் 2019-20-ல் இது ரூ.27,503 கோடியாகவே அது இருந்தது.
சாலை உள்கட்டமைப்புக்காக மத்திய அரசு அதிகம் செலவிட்டு வருகிறது. எனவே சுங்கக்கட்டணம் அவசியமானது. சிறந்த சாலையை நீங்கள் விரும்பினால், அதற்காக நீங்கள் கட்டணம் செலுத்தியாக வேண்டும் என்பதே அரசின் கொள்கை ஆகும். மத்திய அரசு ஏராளமான பெரிய சாலைகள், 4 வழிச்சாலைகள், 6 வழிச்சாலைகளை அமைத்து வருகிறது. பிரம்மபுத்ரா நதியில் ஏராளமான பாலங்களை அமைத்து இருக்கிறோம். இதற்காக வெளிச்சந்தையில் இருந்து நிதி பெற்று வருகிறோம். எனவே சுங்கக்கட்டணம் இல்லாமல் இவற்றை செய்ய இயலாது.
ஆனாலும் சுங்க கட்டண விவகாரத்தில் நாங்கள் மிகவும் நியாயமான முறையிலேயே இருந்து வருகிறோம். 4 வழிச்சாலைகளில் மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கிறோம். இருவழிச்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கவில்லை. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து கட்டண சுங்கச்சாவடிகளும் தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (கட்டண நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகள்-2008 மற்றும் தொடர்புடைய சலுகை ஒப்பந்தத்தின் விதிகளின்படி நிறுவப்பட்டிருக்கிறன்றன. இந்த சட்டப்படி தேசிய நெடுஞ்சாலையில் ஒரே பிரிவு மற்றும் ஒரே திசையில் 60 கி.மீ.க்குள் கட்டணம் வசூலிக்கக்கூடாது. எனினும் இந்த விவகாரத்தில் உண்மையில் சில விதிவிலக்குகள் உள்ளன.
இந்த நாடாளுமன்ற அமர்வுக்குப்பிறகு சுங்கக்கட்டணம் தொடர்பாக நாங்கள் ஒரு புதிய கொள்கையை அறிவிக்க இருக்கிறோம். அதன்மூலம் இந்த பிரச்சினை தீர்க்கப்படும். புதிய கொள்ளையின்படி, நாங்கள் நுகர்வோருக்கு நியாயமான சலுகைகளை வழங்குவோம். அதன்பிறகு சுங்கக்கட்டணம் தொடர்பாக எந்த விவாதமும் இருக்காது" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications