தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர் படத்துக்கு தடை கிடையாது.. பாஜகவுக்கு காங். பதிலடி
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி எடுக்கப்பட்டுள்ள படத்தை மத்திய பிரதேச மாநிலத்தில் தடை செய்ய போவதில்லை என்று அம்மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது.
முன்னாள் பிரமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பிரதமராக பதவி வகித்தார். அவரது செயல்பாடுகள், நடவடிக்கைகள் குறித்து மவுன மோகன் சிங் என்று அவரை பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைத்தன.
தற்போது அதை வைத்து 'தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்' என்ற பயோபிக் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் ஜனவரி 11ம் தேதி வெளிவர உள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியாகி தேசிய அளவில் யாரும் எதிர்பார்க்காத அளவு பேசு பொருளாக மாறிவிட்டது.

விமர்சனமான டிரெய்லர்
பல்வேறு தரப்பிலும் இந்த டிரெய்லர் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. 2004 முதல் 2008 வரை மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சயா பாரு எழுதிய ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்' என்ற ஆங்கில புத்தகத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தடை விதிக்கப்படும் என்று கருத்துகள் பரப்பப்பட்டு வந்தன.

பதிலடி கொடுத்த காங்.
இந் நிலையில், அந்த வதந்திகளுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், மன்மோகன் குறித்து எடுத்து உள்ளதாக சொல்லப்படும் அப்படம் குறித்து நாங்கள் எந்த வித கருத்தும் தெரிவிக்க வில்லை. அதற்கு எதிராக போராடி, நாடு முழுவதும் தேவையில்லாத கவனத்தை பெற்று தர விரும்பவில்லை. பாஜக வேண்டுமென்றே, நாங்கள் ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்தில், படத்தைத் தடை செய்யப் போவதாக வதந்தி பரப்பி வருகிறது. அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று காங்கிரஸ் தெளிவுபடுத்தியுள்ளது.
|
ட்விட்டரில் காங். கருத்து
காங்கிரஸ் தரப்பிலிருந்து இது குறித்து அக்கட்சியின் முக்கிய பிரமுகரான ரன்தீப் சிங் சுர்ஜ்வாலா ட்விட்டரில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: இதுபோன்ற போலித்தனமான, உண்மையில்லாத விஷயங்களில் பாஜக ஏற்படுத்துவதன் மூலம் மத்திய பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் கேள்வி கேட்பதை காங்கிரஸ் நிறுத்தி விடாது. பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட பேரிடி, வேலையில்லா திண்டாட்டம், ஜிஎஸ்டி விவகாரம், ஊழல் குற்றச்சாட்டுகள் மறைந்து போய்விடாது என்று அவர் கூறியுள்ளார்.
|
பாஜக ட்விட்டரில் கருத்து
அதே நேரத்தில் பாஜக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: டிரெய்லரை பகிர்ந்து, ஒரு குடும்பம் இந்த நாட்டை எப்படி 10 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தது என்பதைப் பாருங்கள். டாக்டர். மன்மோகன் சிங் ஒரு பகடை காயாக பயன் படுத்தப்பட்டாரா... காங்கிரஸ் கட்சியின் உள்ளேயிருந்த கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படத்தின் டிரெய்லரை பாருங்கள். வரும் ஜனவரி 11ம் தேதி இப்படம் ரிலீஸாகிறது என்று பாஜக அந்த பதிவில் தெரிவித்துள்ளது.

கடிதம் எழுதிய காங்கிரஸ்
முன்னதாக, மகாராஷ்டிரா இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்யஜீத் தம்பே படேல், திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், படம் வெளி வருவதற்கு முன்னர் எங்களுக்கு ஒரு முறை திரையிட்டு காட்ட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications