நீட் தேர்வு அனைத்து ஏற்பாடுகளும் தயார்...பின் வாங்க முடியாது...தேர்வு முகமை திட்டவட்டம்!!
டெல்லி: நீட் தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. ஒரு தேர்வு மையத்தில் 150 பேர் அனுமதிக்கபடுவார்கள். மீண்டும் தேர்வை ஒத்தி வைத்தால் கல்வியாண்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்து என்று தேசிய தேர்வு முகமை இயக்குநர் ஜெனரல் வினீத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு பெரிய சர்ச்சைகளுக்கு இடையே நடந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் நீட் தேர்வு பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்திய பின்னரே நடக்கிறது. நடப்பாண்டில் கொரோனா தொற்று பரவலுக்கு இடையே நீட் தேர்வை நடத்தலாமா கூடாதா என்ற விவாதம் வெடித்துள்ளது. மாணவர்களும், பெற்றோர்களும் நீட் தேர்வு எழுதுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்குக் காரணம் தொற்று பரவல் தற்போது உச்சத்தில் இருப்பதுதான். தேர்வு நடத்துவதற்கு இது சரியான நேரமாக இல்லை என்று கூறி வருகின்றனர்.
இதேபோல் நாடு முழுவதும் இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதால், எதிர்ப்பும் அதிகரித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று இதுதொடர்பாக விவாதம் நடத்த பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களின் தலைவர்களின் கூட்டத்தை கூட்டி இருந்தார். இதில் பங்கேற்ற ஏழு மாநிலங்களின் முதல்வர்களும் உச்ச நீதிமன்றத்தில் தேர்வை ஒத்தி வைக்க வலியுறுத்தி மனுதாக்கல் செய்யலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தேர்வு நடந்தே தீரும். அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டது என்று தேசிய தேர்வு முகமை இயக்குநர் ஜெனரல் வினீத் ஜோஷி தெரிவித்துள்ளார். நீட், ஜெஇஇ தேர்வுகளுக்கு ஏற்கனவே ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 8 மணி வரை நீட் தேர்வு எழுதுபவர்கல் ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்து வருகின்றனர். இதுவரை 14 லட்சம் பேர் ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்து இருக்கின்றனர்.
கடந்தாண்டு ஜெஇஇ மையங்களில் தேர்வு எழுவதற்கு ஒரு ஹாலில் 234 பேர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். நடப்பாண்டில் இது 120ஆக குறைக்கபட்டுள்ளது. 2019ல் நீட் இளங்கலை தேர்வு எழுத ஒரு ஹாலில் 597 பேர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அது நடப்பாண்டில் 415 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்து இருக்கும் தேசிய தேர்வு முகமை இயக்குநர் ஜெனரல் வினீத் ஜோஷி , ''பதிவு செய்யப்பட்ட டெஸ்கில் வெறும் 15 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். துவக்கத்தில் இருந்தே மாணவர்களின் சந்திப்பை குறைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் எப்போது தேர்வு ஹாலுக்கு வரவேண்டும் என்பதை ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டு இருக்கிறோம். ஒரு மையத்துக்கு 150 பேர் என்று பிரித்துள்ளோம். இவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு 30 முதல் 40 நிமிட இடைவெளியில் குழுக்களாக அனுப்பப்படுவார்கள்.
நுழைவு வாயில், வெளியேறும் வாயில் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தேர்வு மைத்திற்குள் யாரும் வாகனங்களை நிறுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசாரின் உதவியை நாட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மேசைகள் போடுவது, நாற்காலி போடுவது, சிசிடிவி கேமரா அமைப்பது என்று அனைத்து வேலைகளும் முடிந்து விட்டது. இதற்காக 70-80 நாட்கள் தேவைப்படுகிறது. மீண்டும் தேர்வை ரத்து செய்தால் அனைத்தும் குழப்பத்தில் முடியும். நடப்பு கல்வி ஆண்டும் பாதிக்கப்படும். தேர்வு முடிந்த பின்னர் தனித்தனி குழு குழுவாக வெளியே அனுப்ப்படுவர்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் நமது நாட்டின் எதிர்காலம் - நீட் தேர்வுக்கு ஆதரவாக கடிதம் எழுதிய கல்வியாளர்கள்
தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தாலும் வந்து செல்வதிலும் சிக்கல்கள் எழும் என்று பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தேர்வு மையங்களுக்கு வருவதற்கு போதிய வாகன வசதிகள் இல்லை. பெற்றோர் தங்களது சொந்த வாகனங்களில் வரவேண்டும். வாகனங்கள் இல்லாத கிராம மாணவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.