ஓமிக்ரான் வைரஸ் பீதி.. இந்திய கிரிக்கெட் அணியின் தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணம் கதி?
டெல்லி: புதிய வகை கொரோனா வைரஸ் ஓமிக்ரான் பரவல் காரணமாக உலக நாடுகள் பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு விமான சேவையை ரத்து செய்ய ஆரம்பித்துவிட்டன . இருப்பினும் தென்ஆப்பிரிக்காவுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதில் எந்த மாற்றமும் இல்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ள இந்திய அணி அங்கு 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
செஞ்சுரியன், கேப் டவுன் மற்றும் பார்ல் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. டிசம்பர் 17ம் தேதி முதல் ஜனவரி 26ம் தேதி வரை மொத்தம் 41 நாட்கள் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் என்று அட்டவணை பாதிக்கப்பட்டு இருக்கிறது.

விமானம் மட்டுமே
தென்ஆப்பிரிக்காவுக்கு வேறு நகரங்களுக்கு அணிகள் பயணம் செய்யும் போது விமானத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும். வேறு எந்த போக்குவரத்து சாதனத்தையும் பயன்படுத்தக்கூடாது என்று ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது. ஜோகனஸ்பர்க் மற்றும் செஞ்சூரியன் ஆகிய நகரங்களுக்கு இடையே ஒரு மணி நேரம்தான் பயண நேரம் ஆகும். கேப்டவுன் மற்றும் பார்ல் ஆகிய நகரங்களுக்கு இடையேயும் ஒரு மணி நேரம்தான் பயண தூரம் இருப்பினும் விமானத்தில் தான் அணி வீரர்கள் செல்ல இருக்கிறார்கள். கொரோனா நோய் பாதிப்பில் இருந்து தப்புவதற்காக இந்த ஏற்பாடு ஏற்கனவே செய்யப்பட்டிருக்கிறது.

தடுப்பூசிகள் பலன் தருமா?
இந்த நிலையில்தான் தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் புதியவகை கொரோனா வைரஸ் பரவக் கூடியது, அது வேகமாக உருமாற்றம் அடையக் கூடிய அளவுக்கு மோசமான வைரஸ் என்பது தெரியவந்திருக்கிறது. தடுப்பூசிகள் பலன் தருமா என்பது பற்றி இப்போதுதான் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என்று உலக சுகாதார ஆய்வு அமைப்பு தெரிவித்திருக்கிறது.

விமான சேவைகள் ரத்து
எனவேதான் ஐரோப்பிய நாடுகள் பலவும், ஆப்பிரிக்க நாடுகளுக்கு விமான சேவையை ரத்து செய்ய ஆரம்பித்துள்ளன. இந்தியாவில் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்துமாறு விமானத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் மும்பையில் டிசம்பர் 3ம் தேதி முதல் துவங்க உள்ள நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கு பிறகு வேறு யாருடனும் தொடர்பு படுத்தப் படாமல் இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பிறகு அங்கிருந்து தனி விமானத்தில் ஜோகன்னஸ்பர்க் நகரத்துக்கு அவர்கள் செல்வார்கள். இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதால் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடக்கும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தகட்ட நடவடிக்கைகள்
இருப்பினும் ஒருவேளை புதிய வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் வேகமாக பரவினால் அந்த நாட்டு அரசு எந்த மாதிரி நடவடிக்கை எடுக்கிறது என்பது தெரியவில்லை. அதன்பிறகு தேவைப்பட்டால் சுற்றுப் பயணம் ரத்தாகுமா, தள்ளி வைக்கப்படுமா, அல்லது நடைபெறுமா என்பது தெரிய வரும். இப்போதைக்கு, சுற்றுப் பயணத் திட்டத்தில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications