நம்பிக்கையில்லா தீர்மானம்! எதிர்க்கட்சிகளை சமாளிக்கபோகும் 5 மத்திய அமைச்சர்கள்! மோடியே இல்லையே!
டெல்லி: மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று தொடங்க உள்ளது. இந்த விவாதத்தை எதிர்க்கட்சிகளின் தரப்பில் ராகுல் காந்தி தொடங்கி வைத்து பேசுகிறார்.
பல்வேறு அரசியல் பரபரப்புக்கு மத்தியில் கடந்த மாதம் நடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடியது. நடாளுமன்றம் கூடுவதற்கு முந்தைய நாள் மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் ஆடைகள் இன்றி இழுத்துச்செல்லப்பட்ட வீடியோ ஒட்டு மொத்த தேசத்தையும் அதிரவைத்தது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் முன் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களை பேட்டி அளித்தார் பிரதமர் மோடி.

அப்போது அவர் கூறுகையில், "மணிப்பூர் சம்பவம் வெட்கக்கேடானது. எனது இதயம் இதனால் கோபம் நிரம்பி வலிக்கிறது. எந்த குற்றவாளியும் தப்பமாட்டார்கள் என்று நான் உறுதி அளிக்கிறேன். சட்டம் தனது கடமையை செய்யும். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்த இச்சம்பவம் மன்னிக்க முடியாதது." எனவும் மிகவும் உணர்ச்சி பொங்க ஆவேசமாக பேசினார். எனினும், மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால், நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அலுவல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமளிக்கு இடையே சில முக்கிய மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனிடையே, கடந்த ஜூலை 26 ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை அளித்தனர்.
எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார். காங்கிரஸ், திமுக, திரிணாமூல், ஆம் ஆத்மி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் இந்த நோட்டீஸுக்கு ஆதரவளித்து உள்ளனர். ஆகஸ்டு 8 ஆம் தேதி இதுபற்றி விவாதம் தொடங்கப்படும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். அதன்படி, நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்குகிறது.
தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்ட பிறகு நேற்று மக்களைவை திரும்பிய ராகுல் காந்தி, இன்று துவங்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை எதிர்க்கட்சிகளின் சார்பில் தொடங்கி வைப்பார் என்று தகவல்கள் கூறுகிறது. பிரதமர் மோடி இன்று அவை நடவடிக்கையில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. இன்று நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஸ்மிரிதி இரானி, நிர்மலா சீதாராமன், ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ ஆகியோர் பேசுவார்கள் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications