இறுதிச் சடங்கிற்கு ஜிஎஸ்டி இல்ல.. ஆனால், சுடுகாடு கட்ட வரி விதிப்போம் -நிர்மலா சீதாராமன் விளக்கம்
டெல்லி: இந்தியாவில் இறுதிச்சடங்கு, உடல் அடக்கம், உடல் தகனம் மற்றும் சவக்கிடங்கு சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவது இல்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சீதாராமன் தெரிவித்து உள்ளார்.
Recommended Video
நாடு முழுவதும் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று மாலை 7 மணியளவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், லோக்சபாவில் விலை உயர்வு குறித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், "மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் எடுத்து நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

விலைவாசி
உலகளவில் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து இருந்த நேரத்தில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பெரும்பாலான நாடுகளை காட்டிலும் இந்தியாவில் பொருளாதாரம் வலுவான நிலையில் இருக்கிறது. பல உறுப்பினர்களின் பேச்சுக்கள் விலைவாசி உயர்வு குறித்த கவலையை வெளிப்படுத்தாமல், அரசியல் கோணத்தில் இருந்ததை கண்டேன். எனவே நானும் கொஞ்சம் அரசியல் ரீதியாகவே விளக்கமளிக்கிறேன்.

பணவீக்கம்
கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை, ஓமைக்ரான், உக்ரைன் - ரஷியா போர், சீனாவில் ஊரடங்கால் உதிரிபாகங்கள் வரத்து தடைப்பட்ட சூழலிலும் பணவீக்கம் 7% க்கும் குறைவாகவே உள்ளது. ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனும் பாராட்டி இருக்கிறார். சீனா, பாகிஸ்தானைவிட இந்தியாவின் கடன் குறைவாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்." என்றார்.

ஜி.எஸ்.டி. வரி
இன்று காலை ஜுலை மாதம் வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விபரத்தை வெளியிட்டோம். ரூ.1.49 லட்சம் கோடி வரி வசூலிக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து 5 மாதங்களாக ரூ.1.4 லட்சம் கோடிக்கு அதிகமாக ஜி.எஸ்.டி. வரி வசூலாகி வருகிறது. ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இது வரை வசூலானதில் இதுவே 2 வது அதிகபட்ச தொகையாகும்.

இறுதிச்சடங்கு வரி
இறுதிச் சடங்கு, உடல் அடக்கம், உடல் தகனம் மற்றும் சவக்கிடங்கு போன்ற சேவைகளுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பது இல்லை. அவற்றுக்கு முழுமையான வரி விலக்கு வழங்கப்பட்டு உள்ளது. சுடுகாடு கட்டுமானத்தின் மீது மட்டுமே நிலையான வரி விகிதங்கள் விதிக்கப்படும்." என்று அவர் விளக்கம் அளித்தார்.

காங்கிரஸ், திமுக வெளிநடப்பு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து பொருளாதாரம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்த நிர்மலா சீதாராமன், நாளை ராஜ்ஜிய சபாவில் விலை வாசி உயர்வு குறித்த தனது உரையை தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications