சச்சின் பைலட் கோஷ்டி மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க ஹைகோர்ட் பிறப்பித்த தடை தொடரும்- உச்சநீதிமன்றம்
டெல்லி: சச்சின் பைலட் உள்ளிட்ட 18 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். அவருக்கு ஆதரவாக எம்.எல்.ஏக்களும் குரல் கொடுத்தனர். இருப்பினும் நெருக்கடியில் இருந்து கெலாட் அரசு தப்பியது.

இதனை தொடர்ந்து சச்சின் பைலட், துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது ஆதரவு அமைச்சர்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் சச்சின் பைலட் உள்ளிட்ட 18 ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் சிபி ஜோஷி விளக்க நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இந்த தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிராக சச்சின் பைலட் கோஷ்டி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் வரும் 24-ந் தேதி வரை சச்சின் பைல்ட் கோஷ்டி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என சபாநாயகருக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.
இந்த இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து சபாநாயகர் ஜோஷி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இம்மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
மேலும் இவ்வழக்கில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கலாம்; அந்த தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை சபாநாயகர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவும் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் சபாநாயகர் ஜோஷியின் மேல்முறையீட்டு மனு வரும் திங்கள்கிழமையன்று விரிவான விசாரணை நடைபெறும் என்றும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications