உங்கள் ஈகோவை காட்டும் நேரம் இதுவல்ல! துணை ஜனாதிபதி தேர்தல்! மமதா முடிவுக்கு மார்கரெட் ஆல்வா ஏமாற்றம்
டெல்லி: துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதி உடன் நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்ய நடத்தப்பட்ட தேர்தலில் திரௌபதி முர்மு வெற்றி பெற்றார்.
அவர் வரும் திங்கள்கிழமை நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகப் பதவியேற்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் டெல்லியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

துணை குடியரசுத் தலைவர் தேர்தல்
அதேபோல துணை குடியரசுத் தலைவராக இருக்கும்
வெங்கையா நாயுடு
வின் பதவிக்காலமும் விரைவில் முடிகிறது. புதிய துணை குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்ய ஆகஸ்ட் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் பாஜக கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கர் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் இதற்கு முன்பு மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக இருந்தவர் ஆவர்.

மார்கரெட் ஆல்வா
குடியரசுத் தலைவர் தேர்தலைப் போலவே துணை குடியரசுத் தலைவர் தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் களமிறக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி எதிர்க்கட்சி தலைவர்கள் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினர். இறுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாகக் கர்நாடகாவைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணிப்பு
ஜனாதிபதி தேர்தலைப் போலவே இதிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் வெல்வது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. இந்தச் சூழலில் எதிர்க்கட்சிகளிடையே குழப்பம் ஏற்பட்டு உள்ளது. அதாவது துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் தாங்கள் யாருக்கும் வாக்களிக்கப் போவதில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு தொடர்பாக தங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என்றும் இதன் காரணமாகத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அபிஷேக் பானர்ஜி அறிவித்தார்.

ஏமாற்றம் அளிக்கிறது
குடியரசு தலைவர் தேர்தலில் தொடங்கிய எதிர்க்கட்சிகளின் கூட்டணி வரும் 2024 மக்களவை தேர்தல் வரை தொடரும் என கூறப்பட்டது. இருப்பினும், துணை குடியரசு தலைவர் தேர்தலிலேயே எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இதனிடையே திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாகவும் இது ஈகோவை காட்டும் நேரம் இல்லை என்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மார்கரெட் ஆல்வா தெரிவித்துள்ளார்.

ஈகோ
இது தொடர்பாக மார்கரெட் ஆல்வா தனது ட்விட்டர் பக்கத்தில், "துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதில் இருந்து விலகிய திரிணாமுல் காங்கிரஸின் முடிவு ஏமாற்றமளிக்கிறது. இது ஈகோ அல்லது கோபத்திற்கான நேரம் அல்ல. இது தைரியம், தலைமை மற்றும் ஒற்றுமைக்கான நேரம். துணிச்சலின் உருவமாக இருக்கும் மம்தா பானர்ஜி நிச்சயம் எதிர்க்கட்சிகள் பக்கம் இருப்பார் என நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications