"பிரதமர் பதவி காலியாக இல்லை".. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நிதிஷ்குமார் மீது பாஜக பொளேர் அட்டாக்
டெல்லி: நாட்டில் பிரதமர் பதவி காலியாக இல்லை.. இதுதான் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வரும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கான பதில் என்கிறது பாஜக.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்காக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மேற்கொண்டு வருகிறார். நிதிஷ்குமாருடன் ஆர்ஜேடி தலைவரும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவும் இணைந்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை அண்மையில் சந்தித்து பேசினார் நிதிஷ்குமார். இதன் ஒரு பகுதியாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரை நிதிஷ்குமாரும் தேஜஸ்வி யாதவும் சந்தித்தனர். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மமதா பானர்ஜி, பாஜகவை ஜீரோவாக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைய வேண்டும் என வலியுறுத்தினார்.
இதேபோல் அகிலேஷ் யாதவையும் சந்தித்து பேசினர் நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், தாம் பிரதமர் வேட்பாளர் இல்லை; அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைப்பதுதான் தமது பணி என திட்டவட்டமாக கூறியிருந்தார் நிதிஷ்குமார்.
இது தொடர்பாக பாஜக மூத்த தலைவரான முன்னாள் மத்திய அமைச்சர் ஷாநவாஸ் ஹுசைன் கூறியதாவது: பீகாரில் பாஜகவின் ஆதரவுடன் முதல்வரானவர் நிதிஷ்குமார். பீகார் சட்டசபையில் நிதிஷ்குமாரின் ஜேடியூவுக்கு 3-வது இடம்தான். ஆனால் நிதிஷ்குமாரோ இந்த தேசத்தின் பிரதமராக வேண்டும் என கனவு காண்கிறார்.
நிதிஷ்குமாருக்கு ஒரு விஷயம் நன்றாக தெரியும். இந்தியாவில் இப்போதைக்கு பிரதமர் பதவி காலியாக இல்லை என்பதுதான் அது. அப்படியான நிலையில் நான் பிரதமர் வேட்பாளரே இல்லை என ஏன் திரும்ப திரும்ப நிதிஷ்குமார் கூறி வருகிறார். இவ்வாறு ஷாநவாஸ் ஹூசைன் கூறினார்.












Click it and Unblock the Notifications