குடியரசு தின விழா அணிவகுப்பு: மகாராஷ்டிரா, மே. வங்க அலங்கார ஊர்திக்கு அனுமதி இல்லை
டெல்லி: டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் மேற்கு வங்க மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்திருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.
டெல்லியில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26-ல் மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும். இந்த அணிவகுப்பில் இடம்பெறுவதற்காக 32 மாநிலங்கள், 24 அமைச்சகங்களில் இருந்து மொத்தம் 56 அலங்கார ஊர்திகளுக்கான மாதிரி வடிவங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இவற்றை பரிசீலிப்பது தொடர்பாக 5 ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. இதன் முடிவில் மேற்கு வங்க மாநில அரசின் அலங்கார ஊர்தி அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் குடியுரிமை சட்ட திருத்தம், என்.ஆர்.சி. ஆகியவற்றை அமல்படுத்தமாட்டோம் என்றும் திட்டவட்டமாக கூறி வருகிறார் மமதா பானர்ஜி.
இந்நிலையில் தங்களது மாநில அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது உள்நோக்கம் கொண்டது என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுகோத் ராய் தெரிவித்துள்ளார். மேலும் இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று அம்மாநில முதல்வ்வர் மமதா பானர்ஜி சாடியுள்ளார்.
இதேபோல் மகாராஷ்டிரா மாநில அரசின் அலங்கார ஊர்திக்கும் மத்திய அரசு அனுமதி மறுத்திருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள என்.சி.பி.யின் எம்.பி சுப்ரியா சுலே, மகாராஷ்டிராவும் மேற்க்கு வங்கமும் தேச விடுதலைக்கு மிகப் பெரும் பங்காற்றி உள்ளன. ஆனா இதனை அவமதிக்கும் வகையில் இரு மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications