மோடி ஆட்சியில் இந்திய மீனவர்கள் மீது ஒருமுறை கூட இலங்கை துப்பாக்கிச் சூடு நடத்தவே இல்லை- அண்ணாமலை
டெல்லி: பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின்னர் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை ஒரு முறை கூட ஆழ்கடல் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்மையில் காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு, இந்தியாவுக்கான இலங்கை தூதரை மத்திய அரசு நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் அண்ணாமலை இதனைக் கூறியுள்ளார்.
தமிழகம், புதுவையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களின் பிரதிநிதிகளுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை அண்ணாமலை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; இலங்கையின் வசமிருக்கும் படகுகளை மீட்டுத் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: தமிழ்நாட்டின் பல்வேறு கடலோர பகுதி மீனவர்கள், புதுவை- காரைக்கால் மீனவர்கள் ஆகியோரது பிரதிநிதிகளுடன் இன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினோம்.
மேலும், இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவது; சிறை தண்டனை விதிக்கப்படுவது உள்ளிட்டவை குறித்தும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் விளக்கினோம். அனைத்தையும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பொறுமையுடன் கேட்டுக் கொண்டார். பின்னர், மீனவர்களுக்கு ஆதரவாக இந்திய அரசு நிற்கும் என உறுதியளித்தார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் இதுவரை ஒரு முறை கூட ஆழ்கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை; ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இந்த விவகாரத்தில் அதிக முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுப்போம் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வாக்குறுதி அளித்துள்ளார். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
#WATCH | Delhi: Tamil Nadu BJP president K Annamalai says, "Jaishankar ji's meeting was all about bringing Tamil Nadu's fishermen brothers from different coastal regions of Tamil Nadu... They came here, there were a lot of grievances with respect to Sri Lankan Govt arresting our… pic.twitter.com/PelhECU9Qi
— ANI (@ANI) March 13, 2025
துப்பாக்கிச் சூடு நடத்தியதால் இலங்கைக்கு கண்டனம்
கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குட்பட்ட காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தி 13 மீனவர்களை கைது செய்தது. மேலும் இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் 5 மீனவர்கள் படுகாயமடைந்தனர். இவர்களில் 2 பேர் இலங்கையின் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில், இலங்கையின் ஊர்காவற்றுறை பகுதியில் இன்று அதிகாலை இந்திய மீனவர்கள் மீது (காரைக்கால், புதுச்சேரி) இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டின் போது படகில் இருந்த 13 பேரில் படுகாயமடைந்த 2 பேர் தற்போது இலங்கையின் யாழ்ப்பாணம் பயிற்சி மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 3 மீனவர்களும் இந்த துப்பாக்கிச் சூட்டில் சிறு காயமடைந்துள்ளனர்.
இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு நேரில் சென்று துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை சந்தித்து தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
இதனையடுத்து டெல்லியில் உள்ள இலங்கைக்கான இந்திய தூதரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு நேரில் வரவழைத்து இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு மத்திய அரசின் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள இந்திய தூதரகமும் இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்றுள்ளது. மீனவர்கள் விவகாரத்தில் எப்போதும் மனிதாபிமான கண்ணோட்டத்தில்தான் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்தியா எப்பொதும் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி வருகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும் இத்தகைய தாக்குதல்களை நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்திருந்தது. ஆனால் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடைபெறவில்லை என அண்ணாமலை கூறியிருப்பது விவாதத்துக்குரியதாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications