இனி UPI மூலம் நொடிகளில் PF பணம் எடுக்கலாம்! EPFO 3.0 அதிரடி அறிவிப்பு.. எப்படி பயன்படுத்துவது?
டெல்லி: தொழிலாளர்களுக்கு மிகப் பெரிய நல்ல செய்தி.. வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO தனது சுமார் 8 கோடி உறுப்பினர்களுக்கு புரட்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி பிஎஃப் (PF) பணத்தை யுபிஐ (UPI) மற்றும் யுபிஐ வசதி கொண்ட ஏடிஎம் மூலமாக நொடிகளில் எடுக்க முடியும். மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "EPFO உறுப்பினர்கள் UPI கட்டண நுழைவாயில் மூலம் தங்கள் PF சேமிப்பை எடுப்பதற்கான தொழில்நுட்ப சோதனை வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்தச் சேவை விரைவில் பொதுமக்களுக்கு கிடைக்கும். பணம் உறுப்பினர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகவும் உடனடியாகவும் வரும்" என்றார்.

தற்போதைய முறையில் PF பணம் எடுக்க ஆன்லைன் விண்ணப்பம் செய்தாலும் 7 முதல் 10 நாட்கள் வரை ஆகும். 1 லட்ச ரூபாய்க்கு மேல் எடுக்கும்போது கையால் சரிபார்ப்பு, ஆவணப் பிழைகள் போன்றவை தாமதத்தை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வாக 'EPFO 3.0' டிஜிட்டல் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முதலாளிகளின் மேனுவல் ஒப்புதல் தேவையில்லை. காகிதமற்ற, தடையற்ற, வேகமான சேவை இது.
EPFO 3.0 எப்படி செயல்படும்?
UMANG செயலி மூலம் உறுப்பினர்கள் தங்கள் கணக்கில் உள்ள தகுதியான தொகையை சரிபார்க்கலாம். UPI PIN உள்ளிட்டு வங்கிக் கணக்குக்கு மாற்றினால், அந்தப் பணத்தை ஆன்லைன், டெபிட் கார்டு அல்லது UPI ஏடிஎம் மூலம் உடனடியாகப் பயன்படுத்தலாம். QR குறியீட்டை ஸ்கேன் செய்து அவசரப் பணத்தை எடுக்கவும் வழி உள்ளது.
முக்கிய அம்சங்கள்:
உடனடி பரிமாற்றம்: நோய், கல்வி, திருமணம், வீடு கட்டுதல் போன்ற அவசரத் தேவைகளுக்கு பல நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. 3 நாட்களுக்குள் பணம் கிடைக்கும்.
வரம்புகள்: மொத்த PF தொகையை ஒரே நேரத்தில் எடுக்க முடியாது. ஓய்வூதிய பாதுகாப்புக்காக 25% தொகை லாக் செய்யப்பட்டிருக்கும். 50-75% வரை தகுதியான தொகையை மட்டுமே UPI/ATM வழியே எடுக்கலாம்.
இருப்பு விவரம்: UMANG செயலியில் மொத்த இருப்பு மற்றும் எடுக்கக்கூடிய தொகை தெளிவாகத் தெரியும்.
தகுதிகள் என்ன?
UAN கணக்கு செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
ஆதார், PAN உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
பெயர், பிறந்த தேதி ஆதாருடன் பொருந்த வேண்டும்.
மேலும், WhatsApp Chatbot மூலம் PF இருப்பு, தகுதியான தொகை போன்ற விவரங்களை எளிதில் அறியலாம். ஒரு சாதாரண வாட்ஸ்அப் செய்தி போதும்.
EPFO 3.0 : அவசரக் காலங்களில் உடனடி உதவியாக இருக்கும்
இந்த மாற்றம் தொழிலாளர்களின் வாழ்க்கையை எளிதாக்கும். அவசரக் காலங்களில் உடனடி உதவியாக இருக்கும். EPFO 3.0 டிஜிட்டல் இந்தியாவின் மற்றொரு மைல்கல். இனி வாரக்கணக்கான காத்திருப்பு இல்லை; நொடிகளில் PF பணம் கைக்கு வரும்.
இந்த அறிவிப்பு கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு பெரும் நிம்மதியைத் தரும். அரசின் டிஜிட்டல் முயற்சிகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் UAN, ஆதார், PAN விவரங்களை உடனடியாக சரிபார்த்து, இந்த வசதியைப் பயன்படுத்த தயாராகுங்கள்.












Click it and Unblock the Notifications