ஒரே இரத்தம்! அதே வீரம்!.. பாட்டனார் பூலித்தேவன் வீரத்தை போற்றுவோம்.. சீமான் வாழ்த்து
டெல்லி: சுதந்திரப் போராட்ட வீரா் மாவீரன் பூலித்தேவன் பிறந்த தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் 308வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும் செவலில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மாளிகையில் உள்ள பூலித்தேவனின் வெண்கல சிலைக்கு தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சார்பிலும் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் தென்காசி மாவட்டம் முழுவதும் சுமார் 15க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தீவிர வாகன சோதனை செய்த பின் அனுமதிக்கப்படுகின்றனர்.

சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2ம் தேதி காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய விடுதலை வரலாற்றில் 'வெள்ளையனே வெளியேறு' என்று சுதந்திரத்திற்காக முதன்முதலில் முழக்கமிட்ட போராட்ட மாவீரரும், வீர உணர்ச்சியும், இறை உணர்வும் மிகுந்தவருமான மாமன்னர் பூலித்தேவனின் 308ஆவது பிறந்த நாள் வெள்ளிக் கிழமை காலை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, பூலித்தேவனின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த தென்காசி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.
இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2ம் தேதி காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது, மாவட்டத்துக்குள் வாள், கத்தி, லத்தி, கற்கள் போன்ற ஆட்சேபனைக்குரிய பொருட்களுடன் வரும் வாகனங்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிறந்து ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட மாவீரர் பூலித்தேவன். ஆங்கிலேயரை எதிர்த்து 1755 முதல் 1767 வரை போரிட்டு 12 ஆண்டுகளில் 15 முறை வெற்றி பெற்றவர். இறுதியாக இவர் 1767ஆம் ஆண்டு இறந்து விட்டதாக சொல்லப்பட்டாலும், அது உண்மையில்லை. 1767ம் ஆண்டு நடைபெற்ற போரில் தோற்ற பூலித்தேவனை கைது செய்த ஆங்கிலேயர்கள், அவரை சிறைக்கு கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோவிலில் சாமி கும்பிடச்சென்றவர் அந்த கோவிலிலேயே மறைந்து விட்டார். இது பற்றிய கல்வெட்டு அந்த கோவிலில் இன்றைக்கும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதை பார்க்கலாம்.

இந்தநிலையில் மாமன்னர் பூலித்தேவன் 308வது பிறந்நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.
ஒரே இரத்தம்! அதே வீரம்! வீரமிகு நமது பாட்டனார் பூலித்தேவன் அவர்களின் வீரத்தைப் போற்றுவோம்! என்று
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications