அடடே.. அருமையான மசோதா! ‘அதிமுக எம்பி’யாக லோக்சபாவில் பேசிய ஓபிஎஸ் மகன் - மோடி அரசுக்கு பாராட்டு
டெல்லி: லோக்சபாவில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்த தேசிய ஊக்க மருந்து தடை மசோதாவுக்கு அதிமுக எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக ஓ.பி.எஸ். மற்றும் அவரது இரு மகன்களையும் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்த எடப்பாடி பழனிசாமி, ரவீந்திரநாத் குமாரை அதிமுக எம்பியாக கருதக்கூடாது என்றும் சபாநாயகருக்கு கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் மழைகால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு மத்தியில் மத்திய அரசு பல்வேறு புதிய மசோதாக்களையும், சட்டத்திருத்தங்களையும் விவாதத்துக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்று தேசிய ஊக்க மருந்து தடை மசோதாவை மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கொண்டு வந்தார்.

தேசிய ஊக்க மருந்து தடை மசோதா
"இந்தியாவில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஊக்க மருந்து சோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது முக்கியம். அதற்கு இந்த மசோதா உதவும். இதன் மூலம் தேசிய ஊக்க மருந்து தடை முகமை மற்றும் தேசிய ஊக்க மருந்து பரிசோதனை ஆய்வகம் போன்றவற்றின் செயல்பாடுகளுக்கு சட்ட வடிவம் கிடைப்பதோடு தேசிய ஊக்க மருந்து தடை வாரியத்தை உருவாக்கலாம்." என அனுராக் தாக்கூர் கூறினார். குரல் வாக்கெடுப்பு மூலமாக இந்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.

ரவீந்திரநாத் குமார் பேச்சு
இந்த மசோதா மீதான விவாதத்தின்போது லோக்சபாவில் பேசிய ஓ.பி.ரவீந்திரநாத் குமார், அதிமுக எம்.பி என்றே நாடாளுமன்றத்தின் சன்சாத் டிவியில் குறிப்பிடப்பட்டார். "நான் இந்த மசோதாவை ஆதரித்து பேசுகிறேன். இது நமது விளையாட்டு வீரர்களின் உரிமைகளை நிலைநாட்டுகிறது. இதன் மூலம் நமது அரசாங்கம் தடகள வீரர்களின் உடல்நலனில் கவனம் செலுத்துகிறது. விளையாட்டு வீரர்களின் நலனுக்காக சில கோரிக்கைகளை முன்வைக்க உள்ளேன்.

மசோதாவுக்கு ஆதரவு
நாடாளுமன்ற நிலைக்குழு ஊக்க மருந்து சோதனையின்போது விளையாட்டு வீரர்களின் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. நானும் அதை வலியுறுத்துகிறேன். ஊக்க மருந்து உட்கொள்ளாத பல அப்பாவி தடகள வீரர்களின் பெயர் தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு விளையாட்டு முகாமிலும் அங்கீகாரம் பெற்ற ஒரு விளையாட்டு மருத்துவர் இருக்க வேண்டும். தடகள வீரர்களுக்கு சட்டப்பூர்வ உதவிகளையும் அரசு வழங்க வேண்டும்.

மத்திய அரசுக்கு பாராட்டு
அனைத்து மாநிலங்களிலும் ஊக்க மருந்து பரிசோதனை கூடங்கள் அமைப்பதாக ஏதேனும் திட்டங்கள் இருந்தால் சென்னையில் ஒரு பரிசோதனைக் கூடம் அமைக்க வேண்டும். இதன் மூலம் காலதாமதம் ஏற்படுவது குறையும். இந்தியாவில் பன்முக விளையாட்டு நாடாக வளர்க்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை பாராட்டுகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார். ஓபிஎஸ் தரப்புக்கு பாஜக தரப்பு இசைந்து போவதாக கூறப்படும் நிலையில் ரவீந்திரநாத்தின் இந்த பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.












Click it and Unblock the Notifications