ஓபிசி இடஒதுக்கீடு.. திமுகவுடன் காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும்.. ஸ்டாலினுக்கு சோனியா காந்தி கடிதம்
டெல்லி: ஓ.பி.சி சமூகத்தினரின் மருத்துவக் கனவை நிறைவேற்ற திமுக எடுக்கும் முயற்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு என்று காங். தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
பலத்த எதிர்பார்ப்பிற்கு இடையே மருத்துவ படிப்பிற்கான ஓபிசி இடஒதுக்கீடு குறித்த தீர்ப்பு இரண்டு நாட்கள் முன் வெளியானது. சென்னை ஹைகோர்ட் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவது குறித்து 3 மாதங்களில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
அதேபோல் 50% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு விரைந்து சட்டம் இயற்ற குழு அமைக்க வேண்டும். இதற்காக உடனே மூன்று நபர் கமிட்டி அமைத்து முடிவு எடுக்க வேண்டும், இதற்கு சட்ட ரீதியாக எந்த விதமான தடையும் இல்லை என்று சென்னை ஹைகோர்ட் கூறியுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசுக்கு இது தொடர்பாக அழுத்தம் கொடுக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் அகில இந்திய தலைவர்களுடன் ஆலோசனை செய்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி உட்பட 13 பேரிடம் ஸ்டாலின் போனில் பேசினார்.
இது தொடர்பான சட்ட போராட்டங்களை முன்னெடுக்கும்படி ஸ்டாலின் தனது தொலைபேசி உரையாடலில் குறிப்பிட்டார். இந்த நிலையில் இந்த உரையாடலை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.
அதில், ஓ.பி.சி சமூகத்தினரின் மருத்துவக் கனவை நிறைவேற்ற திமுக எடுக்கும் முயற்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும். காங்கிரஸ் சார்பாக எனது ஆதரவை நான் அளிக்கிறேன். இது தொடர்பாக மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அளிக்க வேண்டிய அழுத்தத்தை அளித்து வருகிறது. இது தொடர்பாக சென்னை ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவை அறிவேன்.
இதை உடனே கருத்தில் கொண்டு மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். இனியும் ஓ.பி.சி சமூகத்தினரின் மருத்துவக் கனவை மத்திய அரசு தடுக்க கூடாது . அவர்களுக்கு அநீதி இழைக்க கூடாது. இந்த போராட்டத்தில் திமுகவிற்கு காங்கிரஸ் எப்போதும் உடன் இருக்கும் என்று, சோனியா காந்தி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது சோனியா காந்தி கடிதம் எழுதியதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். காங்கிரசின் உதவிக்கு நன்றி தெரிவிப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.