பூணூல் தப்பில்ல.. ஏது மதசார்பின்மை? ஹிஜாப் தடை தொடரும் என்ற நீதிபதி குப்தாவின் பரபர கருத்துக்கள்
டெல்லி: கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய மாநில விதித்த தடை தொடரும் என அம்மாநில உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், தடை தொடரும் என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தாவின் இந்த வழக்கு விசாரணை அமர்வுகளில் தெரிவித்த கருத்துக்களை பார்ப்போம்.
கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல அரசு விதித்த தடைக்கு எதிராக உடுப்பி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் இறுதித் தீர்ப்பை வழங்கியது.
அதில் ஹிஜாப் இஸ்லாத்தில் அத்தியாவசியமானது இல்லை என்றும், பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவில் தவறு இல்லை எனவும் கூறி மாணவிகளின் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
ஹிஜாப் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு.. தாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட நீதி! ஜவாஹிருல்லா வேதனை!
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் குப்தா, சுதன்சு துலியா அமர்வு முன்பு கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் முன்னணி வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர்.
ஆடை அணியாததும் உரிமை
உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணையின்போது ஆஜரான வழக்கறிஞர் காமத், அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன் நாடுகளில் நடந்த வழக்குகளை மேற்கோள் காட்டினார். அப்போது நீதிபதி குப்தா, "சமூக, கலாச்சார சூழல்களை சார்ந்தே நீதிமன்ற தீர்ப்புகள் வழங்கப்படும். அடை அணிவது அடிப்படை உரிமை எனில், ஆடை அணியாததும் அடிப்படை உரிமையாக இருக்கும்." என்று கருத்து தெரிவித்தார்.
பூணூல்
தென் இந்தியாவை சேர்ந்தவர்கள் பள்ளிக்கு செல்லும்போது சந்தியா வந்தனம், பூணூல், ருத்ராக்ஷ போன்றவற்றை அணிவதாக வழக்கறிஞர் காமத் தெரிவித்தபோது குறிக்கிட்ட நீதிபதி ஹேமந்த் குப்தா, "பூணூல் என்பது சட்டைக்கு உள்ளே இருக்கிறது. யாரும் நமது சட்டையை கழற்றி உள்ளே இருப்பதை பார்க்க மாட்டார்கள். பூணூல் அணிவது பள்ளியின் ஒழுக்கத்தை மீறும் செயலாகாது. மதசார்பின்மை என்ற வார்த்தை உண்மையான அரசியலமைப்பில் இடம்பெறவில்லை." என்றார்.
மதசார்பின்மை
"மத அடையாளங்கள் அணிந்து செல்லக்கூடாது என்பது மதசார்பின்மைக்கு எதிரானது. நாங்கள் நேர்மறையான மதசார்பின்மையை ஏற்கிறோம். ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் மத அடையாளத்தை மறைக்க வேண்டும் என்பது மதசார்பின்மை இல்லை. நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றினால் நேர்மறை மதசார்பின்மையை அடையலாம்." என்று வழக்கறிஞர் காமத் கூற நீதிபதி குப்தா, "நாங்கள் அந்த வார்த்தை பற்றி பேசுகிறோம். அது அரசியல் அறிக்கையாக சேர்க்கப்பட்டதா? என தெரியவில்லை." என்றார்.
மத அடையாளம்
மறுநாள் விசாரணையில் ஆஜரான வழக்கறிஞர் காமத், "மூத்த வழக்கறிஞர் பராசரன் மத அடையாளத்துடன் இருக்கிறார். ஆனால் பொது நிலையை பாதிக்கவில்லை." என்று கூறினார். இதனை கேட்ட நீதிபதி ஹேமந்த் குப்தா, "இங்கு ஒரு ஒழுங்கு உள்ளது. நீங்கள் மற்ற வழக்கறிஞர்களை ஒப்பிடக் கூடாது." என்று எச்சரித்தார்.
டர்பன்
ஹிஜாபுக்கு ஆதரவாக வாதாடிய மற்றொரு வழக்கறிஞர் பாஷா, "ஹிஜாப் அணிந்து செல்வதற்காக மாணவி பள்ளிக்கு செல்லாமல் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். ஆனால் சிக்கியர்களும் டர்பன் அணிகிறார்கள்." என்று வாதிட்டார். அப்போது நீதிபதி குப்தா, "உச்சநீதிமன்ற ஐவர் அமர்வு டர்பன் அணிந்து செல்ல சீக்கியர்களுக்கு அனுமதி இருப்பதாக கூறியுள்ளது. அதன் காரணமாகவே சீக்கியர்களுடன் ஒப்பிடுவதை முறையானது அல்லது என்று நாங்கள் கூறுகிறோம். சீக்கிய மதத்தில் 5 விசயங்கள் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. சீக்கியம் இந்திய கலாச்சாரத்தின் அங்கமாக இருப்பதால் அதை ஒப்பிடாதீர்கள்." என்றார்
ஹிஜாப் எப்படி கட்டாயம்?
குர்ஆனில் ஹிஜாப் தொடர்பாக இடம்பெற்ற கருத்துக்களையும், இஸ்லாத்தில் அது எங்கு கடமையாக்கப்பட்டு இருக்கிறது என்பதையும் வழக்கறிஞர் பாஷா குறிப்பிட்டு விளக்கமளித்தார். அதற்கு நீதிபதி குப்தா, "நீங்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸை வாசிக்கிறீர்கள் நாங்கள் என்ன செய்வது? நீங்கள் ஹிஜாபுக்கு தற்காலிக தண்டனை இல்லை என்கிறீர்கள். தொழுகை, ஜக்காத்துக்கும் இடைக்கால தண்டனை இல்லையா..? ஹிஜாப் அவற்றுக்கு கீழே இருந்தால் அது எப்படி கட்டாயமாகும்?" என்று கேள்வி எழுப்பினார்.
எது ஹிஜாப்?
இந்த வழக்கில் ஹிஜாபுக்கு ஆதரவாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சல்மான் குர்ஷீத், ஹிஜாப், புர்கா, ஜில்பாப் ஆகியவற்றின் புகைப்படங்களை காட்டிய மூன்றுக்குமான வித்தியாசங்களை விளக்கினார். "இஸ்லாத்தில் கடமை மற்றும் கடமை இல்லை என்ற இரட்டை நிலை கிடையாது. குர்ஆனில் இருப்பது எப்படி கடமையாக உள்ளதோ அதேபோல் முஹம்மது நபி தெரிவித்த கருத்துக்களும், போதனைகளும் கடமைதான். அனைவரும் மனதில்கொள்ள வேண்டிய முக்கியமான விசயம் இது." என்றார்.
பள்ளியில் மதம்
மறுநாள் விசாரணையில் நீதிபதி ஹேமந்த் குப்தா, மத உரிமையை பள்ளி வரை எடுத்துச் செல்லலாமா என்று கேள்வி எழுப்பினார். "அடை அணிவது அடிப்படை உரிமை எனில், ஆடை அணியாததும் அடிப்படை உரிமையாக இருக்கும். மற்றவர்கள் பள்ளியில் சீருடை அணிந்திருக்கும்போது, இவர்கள் தலையில் முக்காடு அணிகிறார்கள்." என்றும் அவர் கூறினார்.