கோரமண்டல், ஹவுரா-யஸ்வந்த்பூர், சரக்கு ரயில்.. மோதிக்கொண்ட 3 ரயில்கள் எவை? முழு விவரம்
டெல்லி: கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்றுகொண்டிருந்த யஸ்வந்த்பூர் - ஹவுரா விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் என்று 3 ரயில்கள் விபத்தில் சிக்கியுள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் விரைவு ரயில் வழக்கம் போல் 3.20 மணிக்கு புறப்பட்டுள்ளது. இந்த ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே இரவு 7.30 மணியளவில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத வகையில் சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்ததால், எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது ஏறியது. இதனால், ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே எப்படி இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரயிலின் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் சரிந்து விழுந்துள்ளது. அப்போது பெங்களூருவில் இருந்து 11.20 மணிக்கு புறப்பட்டு கொல்கத்தா நோக்கி சென்றுகொண்டிருந்த யஸ்வந்த்பூர் - ஹவுரா விரைவு ரயில், தடம்புரண்ட ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதனால் யஸ்வந்த்பூர் - ஹவுரா விரைவு ரயிலின் சில பெட்டிகளும் தடம் புரண்டுள்ளது. ஒரே நேரத்தில் 3 ரயில்கள் விபத்துள்ளான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் சுமார் 70க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாகவும், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக ஒடிசா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ரயில் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த பயணிகள் சொல்லும் தகவல்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications