இன்ஜின் உட்பட மொத்தமாக 10 பெட்டிகள்.. கோரமண்டல் ரயிலின் எந்தெந்த பெட்டிகள் தடம்புரண்டன? முழு விவரம்!
டெல்லி: கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கியுள்ள நிலையில், எந்தெந்த ரயில் பெட்டிகள் தடம்புரண்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. அதில், இன்ஜின் உட்பட A1, A2, B2, B3, B4, B5, B6, B7, B8, B9 ஆகிய 10 பெட்டிகள் தடம்புரண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் விரைவு ரயில் வழக்கம் போல் புறப்பட்டுள்ளது. இந்த ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே இரவு 7 மணியளவில் வந்தபோது, எதிர்பாராத வகையில் சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்ததால், எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது ஏறியது.
இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரயிலின் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் சரிந்து விழுந்துள்ளது. அப்போது பெங்களூருவில் இருந்து புறப்பட்டு கொல்கத்தா நோக்கி சென்றுகொண்டிருந்த யஸ்வந்த்பூர் - ஹவுரா விரைவு ரயில், தடம்புரண்ட ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதனால் யஸ்வந்த்பூர் - ஹவுரா விரைவு ரயிலின் சில பெட்டிகளும் தடம் புரண்டுள்ளது. ஒரே நேரத்தில் 3 ரயில்கள் விபத்துள்ளான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தால் இதுவரை ரயிலில் பயணித்த 70 பேர் உயிரிழந்தனர். மேலும் 350 முதல் 400 பேர் வரை காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அதேபோல் மருத்துவ சிகிச்சைக்கான பணிகளும் தயார் நிலையில் உள்ளன.

இந்த நிலையில் கோரமண்டல் விரைவில் ரயிலில் தடம்புரண்ட பெட்டிகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரயிலின் A1 மற்றும் A2 ஆகியவை தடம்புரண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோரமண்டல் ரயிலின் B2, B3, B4, B5, B6, B7, B8, B9 ஆகிய பெட்டிகளோடு இன்ஜினும் தடம்புரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமாக கோரமண்டல் ரயிலின் இன்ஜின் உட்பட 10 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக தெரிய வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications