பல நாடுகளுக்குப் பரவும் ஓமிக்ரான்.. எந்தளவு ஆபத்தானது? தென் ஆப்பிரிக்கா ஆய்வாளர்கள் புது வார்னிங்
டெல்லி: ஓமிக்ரான் கொரோனா குறித்த அச்சம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த உருமாறிய கொரோனா எவ்வளவு ஆபத்தானது, என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்துப் பல முக்கிய தரவுகளைத் தென் ஆப்பிரிக்க ஆய்வாளர்கள் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே உலகின் அனைத்து நாடுகளையும் அலறவிடுவது புதிய உருமாறிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் தான். இதுவரை இந்த ஓமிக்ரான் கொரோனா 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த ஓமிக்ரான் உருமாறிய கொரோனாவை உலக சுகாதார அமைப்பு கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது.
'இந்தியாவுக்குள் நுழைந்த ஓமிக்ரான்.. யாரும் பீதியடையத் தேவையில்லை, ஆனால்..' மத்திய அரசு கூறுவது என்ன
ஓமிக்ரான் கொரோனா
உலகின் பல்வேறு நாடுகளும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் உடனான விமான போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இருந்தாலும் கூட ஏற்கனவே சுமார் 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த ஓமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது. அமெரிக்காவில் நேற்று முதல்முறையாக ஒருவருக்கு ஓமிக்ரான் உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதேபோல இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் இரண்டு பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்க ஆய்வாளர்கள்
இந்நிலையில், தென் ஆப்பிரிக்க ஆய்வாளர்கள் இந்த ஓமிக்ரான் கொரோனா குறித்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். இந்த உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டு சில நாட்கள் மட்டுமே ஆவதால், இது என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை தற்போதைய நிலையில் உறுதியாகக் கூற முடியாது எனத் தென் ஆப்பிரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
துல்லியமாகக் கூற முடியாது
இந்த வைரஸ் இதுவரை பெரும்பாலும் இளைஞர்களையே தாக்கியுள்ளது. பொதுவாக இளைஞர்களிடம் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் என்பதால் இந்த ஓமிக்ரான் வைரஸ் எந்தளவு தீவிர பாதிப்பை இது ஏற்படுத்துகிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்துக் கூடுதல் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் இன்னும் கொஞ்சக் காலத்தில் இந்த உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு குறித்து முக்கிய தரவுகள் கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தீவிர பாதிப்பை ஏற்படுத்துமா
இது தொடர்பாகத் தென் ஆப்பிரிக்க ஆய்வாளர்கள் மேலும் கூறுகையில், "இதுவரை ஓமிக்ரான் பெரும்பாலும் இளைஞர்கள் மத்தியில் தான் ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது தான் மெல்ல வயதானவர்கள் மத்தியிலும் ஓமிக்ரான் பாதிப்பு பரவுகிறது. வைரஸ் பாதிப்பு அதிகரித்தாலும் கூட இந்த ஓமிக்ரான் உருமாறிய கொரோனாவால் வரும் காலங்களில் தீவிர பாதிப்புகள் ஏற்படாது என்றே எதிர்பார்க்கிறோம்" என்றனர்.
தென் ஆப்பிரிக்கா வேக்சின் பணிகள்
தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,561 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதாவது வெறும் 24 மணி நேரத்தில் அங்கு வைரஸ் பாதிப்பு இரட்டிப்பாகியுள்ளது. மேலும், தென் ஆப்பிரிக்காவில் தற்போது ஓமிக்ரான் கொரோனா ஆதிக்கம் செலுத்தும் உருமாறிய வகையாக மாறியுள்ளது. மேலும், உலகின் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது தென் ஆப்பிரிக்காவில் வேக்சின் பணிகளும் மந்தமாகவே உள்ளது. அங்கு 6.7% பேருக்கு மட்டுமே 2 டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. இது கவலைக்குரிய அம்சமாகும்.
வேக்சின் வேலை செய்யுமா
இது தொடர்பாக KRISP மரபியல் நிறுவனத்தில் தொற்று நோய் நிபுணர் ரிச்சர்ட் லெசெல்ஸ் கூறுகையில், "இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவும் ஆற்றலைக் கொண்டிருந்தால், வேக்சின் போடாதவர்களை இது எளிதாகத் தாக்கும். அது தான் இப்போது எங்களுக்கு முக்கிய கவலையாக உள்ளது. தற்போது நம்மிடம் இருக்கும் வேக்சின் இதர உருமாறிய வைரஸ்களுக்கு எதிராகவும் வேலை செய்துள்ளது. எனவே, இந்த ஓமிக்ரான் வைரசுக்கு எதிராகவும் கூட வேக்சின்கள் வேலை செய்யும் என்றே நாங்கள் நம்புகிறோம்" என்றார்.