சூடான்: ராணுவம், துணை ராணுவம் இடையே உக்கிர மோதல்- உயிரிழப்பு 56 ஆக அதிகரிப்பு; இந்தியர் ஒருவர் பலி
கார்டோம்: சூடானில் ராணுவம்- துணை இராணுவ குழுக்களிடையேயான மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த ஆல்பர்ட் அகஸ்டின் என்பவரும் கொல்லப்பட்டுள்ளதாக சூடானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

சூடானில் 2019-ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிபர் அல் பஷீர் ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னரான ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு துணை ராணுவ குழுக்கள் ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ஆயுதக் குழுக்களில் Rapid Support Forces என்பது அதிக வலிமையானதாகவும் கருதப்படுகிறது.
சூடான் ராணுவம், துணை ராணுவமான Rapid Support Forces இடையேயா மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கார்டோம் விமான நிலையத்தை கைப்பற்றியதாக துணை ராணுவக் குழு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து துணை ராணுவக் குழுவினர் மீது சூடான் ராணுவம் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த தாக்குதல் அதிகரித்துள்ளது.
இதனால் இந்தியர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என சூடானில் உள்ள இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்து வந்தது. இந்நிலையில் ராணுவம், துணை இராணுவம் இடையேயான மோதலில் ஆல்பர்ட் அகஸ்டின் என்ற இந்தியர் உயிரிழந்துள்ளதாக சூடானில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.













Click it and Unblock the Notifications