“கடைசி சான்ஸ்”.. நீட் தேர்வு எழுதும் / எழுத விரும்பும் மாணவர்களே.. NTA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
டெல்லி: நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 2 நாட்கள் கூடுதலாக வழங்கியுள்ளது தேசிய தேர்வு முகமை. ஏப்ரல் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (NTA) நடத்தி வருகிறது.

வரும் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட13 மொழிகளில் மே 5ஆம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கியது. முதலில் மார்ச் 9ஆம் தேதி இரவு 11.55 வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் பிறகு நீட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு மார்ச் 16ஆம் தேதி இரவு 10.50 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது. அதன்படி, ஏராளமான மாணவ மாணவிகள் மார்ச் 16ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். 23 லட்சத்திற்கும் அதிகமானோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பப் பதிவு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்து விண்ணப்பப் பதிவு மேற்கொள்ள மறுவாய்ப்பு கேட்டு தேசிய தேர்வு முகமைக்கு ஏராளமான கோரிக்கைகள் வந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தேசிய தேர்வு முகமை இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை முதல் நாளை மறு நாள் வரை (ஏப்ரல் 10) வரை விண்ணப்ப பதிவு செய்யலாம் என அறிவித்துள்ளது.
இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், பழைய விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய நினைப்பவர்கள் இந்த கடைசி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக ஏப்ரல் 10ம் தேதி இரவு 10.50 மணி வரை விண்ணப்பிக்கலாம், விண்ணப்ப கட்டணத்தை அன்று இரவு 11.50 வரை செலுத்தலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications