குவைத் தீ விபத்தில் மேலும் ஒரு இந்தியர் பலி! இறந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்வு
டெல்லி: குவைத் தீவிபத்தில் படுகாயமடைந்த மேலும் ஒரு இந்தியர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குவைத்தின் மங்காப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள். இந்த அடுக்குமாடி குடியிருப்பு கேரளாவை சேர்ந்த என்பிடிசி குழுமத்திற்கு சொந்தமானது. இதன் உரிமையாளர் கே.ஜி. ஆபிரகாம்.

இந்தியாவில் இருந்து குவைத் மங்காப் நகருக்கு வேலை தேடி செல்லும் தொழிலாளர்கள் அங்கு தங்கி பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி திடீரென தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில் தரைதளத்தில் சமையலறையில் பிடித்த தீ மளமளவென பரவியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயை அணைத்தனர். ஆனாலும் தீ கட்டுக்குள் வரவில்லை. இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும் பல தொழிலாளர்கள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
குவைத் தீவிபத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த 13 ஆம் தேதி காலை குவைத்துக்கு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கே.வி. சிங் சென்றார். இந்த நிலையில் குவைத் தீவிபத்தில் 7 தமிழர்கள் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களுடைய உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
வீராசாமி மாரியப்பன், முகமது ஷரீப், ரிச்சர்ட் ராய், சிவசங்கர், சின்னதுரை, கருப்பண்ணன் ராமு, ராஜு எபினேசர் ஆகிய 7 தமிழர்கள் உயிரிழந்தனர். பலியானவர்களில் 45 பேர் இந்தியர்கள், 3 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள். ஒரு உடல் மட்டும் அடையாளம் காணப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் உயிரிழந்த 45 பேரின் உடல்கள் நேற்றைய தினம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இந்தியர் ஒருவர் நேற்று முன் தினம் இரவு உயிரிழந்துவிட்டார். இதனால் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது.
குவைத் தீவிபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. 50 பேரை பலி கொண்ட இந்த தீவிபத்துக்கு மின் கசிவே காரணம் என குவைத் தீயணைப்புத் துறை கூறியிருந்தது. அந்த கட்டடத்தின் தரைதளத்தில் உள்ள காவலாளி அறையில் மின்கசிவு ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications