டெல்லியில் நைஜீரிய பெண்ணுக்கு குரங்கு அம்மை.. நாட்டின் மொத்த பாதிப்பு 9-ஆக உயர்வு!
டெல்லி : தலைநகர் டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நாடு முழுவதும் இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலக நாடுகளை கடும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ், லட்சக்கணக்கானோரை காவு வாங்கியது. தற்போது இதன் தாக்கம் குறைந்து வரும் நிலையில், மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை வைரஸ், பொதுமக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகை அச்சுறுத்தி வருகிற குரங்கு அம்மை 75 நாடுகளில் பரவி இருக்கிறது.
டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை.. நாடு முழுக்க மொத்த பாதிப்பு 8 ஆக உயர்வு!
ஆசியாவில் பரவும் குரங்கு அம்மை
குரங்கு அம்மை நோய் பரவத் தொடங்கியது முதலே, பாலியல் நடத்தை பற்றி பல சந்தேகங்கள் எழுப்பி வருகின்றன. அறிகுறிகள் உள்ள ஒருவருடன் உடலுறவு உட்பட எந்த வகையான நெருங்கிய தொடர்பு மூலமாகவும் இந்த வைரஸ் பரவக்கூடும் எனக் கூறப்படுகிறது. இந்த கொடிய நோய், ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து தற்போது ஆசிய நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவை மிரட்டும் குரங்கு அம்மை
இந்தியாவில் முதன்முதலாக கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த ஜூலை 14-ம் தேதி குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. இவரைத் தவிர, கொல்லம், கண்ணூர், மலப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என கேரளாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், வெளிநாட்டில் குரங்கு அம்மை பாதித்த நிலையில் ஊர் திரும்பிய திருச்சூரை சேர்ந்த இளைஞர் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்தியா வருபவர்கள் கண்காணிப்பு
குரங்கு அம்மை நோய் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களிடம் இருந்தே அதிகம் பரவி வருவதாக கூறப்படுகிறது. இதனையொட்டி விமான நிலையங்கள், துறைமுகங்கள் வாயிலாக இந்தியாவுக்கு வருபவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அங்கு அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புடன் செயல்பட வலியுறுத்தப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லியில் மேலும் ஒருவருக்கு பாதிப்பு
டெல்லியில் ஏற்கெனவே 3 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நைஜீரியா பெண்ணுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் உடனடியாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் ரத்த மாதிரி, புனேவில் உள்ள ஆய்வுக் கூடத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனால் டெல்லியில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் நாட்டில் இதுவரை 9 பேருக்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளது.