‛ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை 2029ல் கொண்டு வரலாம்! பரிந்துரை செய்யும் சட்ட ஆணையம் - பரபர தகவல்
டெல்லி: இந்தியா முழுவதும் சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் வகையில் ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை 2029ம் ஆண்டில் அமல்படுத்த சட்ட ஆணையம் பரிந்துரை செய்ய முடிவு எடுத்துள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளன.
இந்தியா முழுவதும் தற்போது நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் என்பது தனித்தனியாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் மத்திய பாஜக அரசு ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

இதற்கான பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆய்வுகளை மேற்கொண்டது. மேலும் நாடு முழுவதும் உள்ள மக்கள், அரசியல் கட்சிகள் ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்த தங்களின் கருத்துகளை இணையதளம் மற்றும் கடிதம் மூலம் வழங்க அந்த குழு தெரிவித்தது.
அதன்படி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு என கலவையான கருத்துகளை பொதுமக்கள், அரசியல் கட்சியினர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த குழு சார்பில் ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து மத்திய சட்ட ஆணையம், தலைமை தேர்தல் ஆணையத்தின் கருத்துகளும் கேட்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மத்திய சட்ட ஆணையம் ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக முக்கிய பரிந்துரைகளை அறிக்கையாக அளிக்க திட்டமிட்டுள்ளது. ஓய்வு நீதிபதி ரிதுராஜ் அவஸ்தியின் தலைமையில் சட்ட ஆணையம் செயல்பட்டு வரும் நிலையில் முக்கிய பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கப்பட உள்ளது.
அதன்படி நாடு முழுவதும் வரும் 2029ம் ஆண்டு முதல் ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை செயல்படுத்த பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதிய மத்திய அரசு அமையும். இந்த மத்திய அரசின் பதவிக்காலம் என்பது 2029 மே அல்லது ஜுன் மாதம் முடிவுக்கு வரும். அதன்பிறகு மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும். அந்த சமயத்தில் நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல்களை ஒன்றாக நடத்தலாம் என பரிந்துரை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என மத்திய சட்ட ஆணையம் தனது பரிந்துரையில் தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் ‛ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் கொண்டு வருவதன் மூலம் சில பிரச்சனைகள் எழலாம். அதாவது, ஏதேனும் ஒரு மாநிலத்தில் முன்கூட்டியே ஆட்சி கவிழலாம். அப்படி நடந்தால் என்ன செய்வது? என்பது தொடர்பாகவும் சட்ட ஆணையம் தனது பரிந்துரையில் தெரிவிக்க உள்ளதாம். அதாவது 5 ஆண்டு முடிவதற்குள் ஆட்சி கவிழ்ந்தால் அங்குள்ள அனைத்து கட்சிகளும் சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைக்க பரிந்துரை செய்ய வேண்டும். இதற்காக அரசியலமைப்பில் தனியாக திருத்தம் செய்ய வேண்டும். ஒருவேளை அனைத்து கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் இல்லாவிட்டால் மீதமுள்ள காலத்துக்கு மட்டும் புதிய தேர்லை நடத்த சட்ட ஆணையம் பரிந்துரை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications