ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா? செலவு முதல் செக்யூரிட்டி வரை! 10 பெரிய சவால்கள் இதோ-ஆஹா தலைசுற்றுதே
டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற வகையில் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வருவதில் உள்ள 10 மிகப்பெரிய சிக்கல்களை லோக்சபா செயலகம் பட்டியலிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பதை அமல்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு இதுகுறித்த பேச்சு எழுந்த நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டது.

இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் கடந்த மாதம் 11ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து முடிந்த சூழலில் மீண்டும் செப்டம்பர் 18 முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்றத்தின் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த 5 நாள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் 5 அமர்வுகளாக நடைபெற உள்ள நிலையில் கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் பல்வேறு யூகங்கள் கிளம்பின. குறிப்பாக மத்திய அரசு ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. இந்த மசோதா 2 சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டால் நாட்டில் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தலை நடத்த முடியும்.
குழு அமைப்பு: மேலும் ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய மத்திய அரசு சிறப்புக்குழு அமைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழு ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்லை நடத்துவது சாத்தியமா? என்பதை ஆராய தொடங்கி உள்ளது. இதனால் தற்போது மீண்டும் ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் விவாதப்பொருளாகி உள்ளது.
10 பிரச்சனைகள்: இந்நிலையில் தான் ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்பது எளிமையான காரியமாக இருக்காது என கூறப்படுகிறது. இதுதொடர்பாக லோக்சபா செயலகத்தின் ஆய்வு மற்றும் தகவல் பிரிவு சார்பில் மொத்தம் 10 வகையான பிரச்சனைகள் மிகவும் சவாலாக இருக்கலாம் என தெரிவித்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:
முதல் சவால்: ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை அமல்படுத்த வேண்டும் என்றால் குறைந்தபட்சம் அரசியலமைப்பு சட்டத்தில் 5 பிரிவுகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும். ஆர்ட்டிக்கிள் 83 (நாடாளுமன்ற சபைகளில் காலம் தொடர்பான பிரிவு), ஆர்ட்டிக்கிள் 85 (ஜனாதிபதி மூலம் மாநில அரசை கலைப்பது), ஆர்ட்டிக்கிள் 172 (சட்டசபை பதவிக்காலம் தொடர்பான பிரிவு) ஆர்ட்டிக்கிள் 174 (சட்டசபை, மாநிலங்களவை கலைக்கும் சட்டப்பிரிவு), ஆர்ட்டிக்கிள் 356 (ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் பிரிவு) உள்ளிட்டவற்றில் திருத்தம் என்பது மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
2, 3, 4வது சவால்: 2வது சவால் என்பது ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வருவதில் அனைத்து அரசியல் கட்சிகளிடும் ஒருமித்த கருத்து என்பது தேவையாகும். 3வது சவால் என்பது தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ள அனைத்து கட்சிகளிடமும் பேசி சுமூக உடன்பாட்டை எட்ட வேண்டும். 4வது சவால் என்பது குறிப்பிட்ட ஒரு சட்டசபையை முன்கூட்டியே கலைத்தாலோ அல்லது ஆட்சி கலைந்தாலோ அதனை நீட்டிப்பு செய்யும் விஷயத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்த தெளிவான பார்வை வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4வது சவால் என்னவென்றால்
5வது சவால்: இது வாக்குப்பதிவு எந்திரங்களை சார்ந்த விஷயமாகம். நாட்டில் தற்போது 10 லட்சம் ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் ஒரு வாக்ச்சாவடிக்கு 2 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேவையாகும். மேலும் முந்தைய கால தேர்தல்களின் அடிப்படையில் பார்த்தால் குறைந்தபட்சம் 40 சதவீத ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், 20 சதவீத கட்டுப்பாட்டு இயந்திரங்களும் ரிசர்வ் என்ற முறையில் வைக்கப்பட்டு இருக்கும்.
இதனால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் மொத்தம் 28 லட்சம் ஓட்டுப்பதிவு எந்திரங்களம், 24 லட்சம் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் தேவையாகும். ஒரு ஓட்டுப்பதிவு இயந்திரம் தயாரிக்க 2013ம் ஆண்டுப்படி ரூ.8 ஆயிரமும், கட்டுப்பாட்டு இயந்திரங்களுக்கும் ரூ.9,500ம் செலவாகும். அப்படிப்பார்த்தால் புதிதாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வாங்க ரூ.3,570.90 கோடி செலவு செய்யப்பட வேண்டி இருக்கும். இதற்கு நிதி ஆதாரம் தேவை.
6வது சவால்: மேலும் நாட்டில் தற்போது விவிபேட் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தலில் யாருக்கும் ஓட்டளித்தோம் என்பதை வாக்காளர்கள் இந்த விவிபேட் மூலம் தெரிந்து கொள்கிறார்கள். தற்போது நாடு முழுவதும் விவிபேட் பயன்பாட்டில் உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் விவிபேட் எந்திரங்களின் எண்ணிக்கை என்பது இரட்டிப்பாக தேவையாகும்.
அதாவது ஒரே நேரத்தில் 10 லட்சம் ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் நடக்கும்போது தேர்தல் பயன்பாடு மற்றும் ரிசர்வாக வைக்க மொத்தம் 25 லட்சம் விவிபேட் எந்திரங்கள் தேவைப்படும். மேலும் ஒரு விவிபேட் இயந்திரம் தயாரிக்க ரூ.22,853 தேவையாகும் எனும்போது தற்போது பற்றாக்குறையாக இருக்கும் விவிபேட் இயந்திரங்களை வாங்க ரூ.5713.25 கோடி வரை செலவு ஏற்படும்.
7வது சவால்: ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையில் செயல்படுத்த வேண்டும் என்றலா் முதற்கட்டமாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் வாங்கவே ரூ.9,284.15 கோடி நிதி தேவையானதாக உள்ளது. இதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
8வது சவால்: மேலும் விவிபேட், ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் ஆயுள்காலம் என்பது 15 ஆண்டுகள் தான். அப்படி பார்த்தால் ஒரு இயந்திரத்தை அதிகபட்சம் 3 அல்லது 4 தேர்தல்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் ஒவ்வொரு 15 ஆண்டுகளுக்கும் இயந்திரத்தை மாற்ற வேண்டும் எனும் போது அதற்காக அவ்வப்போது நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.
9வது சவால்: பொதுவாக தேர்தல் நடத்தி முடித்தபிறகு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வார் ஹவுஸ்களில் பாதுகாக்கப்படும். ஒவ்வொரு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள வார்ஹவுஸ்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது வார்ஹவுஸ்களின் எண்ணிக்கையை உயர்த்துவது அல்லது அதன் பரபரப்பளவை அதிகரிப்பது முக்கியமானதாகும். சில நேரங்களில் தனியார் கட்டடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் வைக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இந்த வேளையில் இயந்திரங்களின் பாதுகாப்பை அதிகரிக்க கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும்.
10வது சவால்: நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல் தனித்தனியாக நடந்தால் ஒரே ஊழியர்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும். ஆனால் 2 தேர்தல்கலும் ஒன்றாக நாடு முழுவதும் நடக்கும் பட்சத்தில் தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள், போலீசாரின் எண்ணிக்கையில் சிக்கல்கள் ஏற்படலாம்.












Click it and Unblock the Notifications