டெல்லியில் ஜெயிச்சு ஒருவாரமாச்சு.. புது முதல்வரை தேர்ந்தெடுக்க முடியாமல் அல்லாடும் பாஜக!
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற பாஜக கடந்த பல நாட்களாக புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. டெல்லி பாஜகவில் பலரும் முதல்வர் பதவிக்கு முட்டி மோதுவால் அக்கட்சியின் மேலிடம் புதிய முதல்வர் யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் போராடி வருகிறது.
டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 8-ந் தேதி நடைபெற்ரது. டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டசபை தொகுதிகளில் பாஜக 48 இடங்களை கைப்பற்றியது; ஆம் ஆத்மி கட்சிக்கு 22 இடங்கள் கிடைத்தன. டெல்லியில் பெரும்பான்மைக்கு தேவை 36 இடங்கள். இதனால் டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பின்னர் பாஜக ஆட்சி அமைந்துள்ளது.

அதேநேரத்தில் டெல்லியின் புதிய முதல்வர் யார் என்பதை ஒரு வாரமாக தீர்மானிக்க முடியாமலும் தேர்ந்தெடுக்க முடியாமலும் பாஜக மேலிடம் திணறி வருகிறது. டெல்லி முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வர்களின் மகன்கள், பெண் எம்.எல்.ஏக்கள் என பலரும் முட்டி மோதுகின்றனர். இவர்களில் யாரை தேர்ந்தெடுத்தாலும் மற்றொரு தரப்பு அதிருப்தியை வெளிப்படுத்தி போர்க்கொடி தூக்குமோ என்கிற அச்சத்தில் இருக்கிறதாம் பாஜக மேலிடம்.
இதனால் பிரதமர் மோடியின் அமெரிக்கா பயணம் முடிவடைந்த பின்னர் புதிய முதல்வர் மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழா இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் கூட இன்று வரை புதிய முதல்வர் தொடர்பாக எந்த ஒரு முடிவையும் பாஜக மேலிடம் மேற்கொள்ளவில்லை. இது தொடர்பாக ஒரு பார்வையாளர் குழுவையும் பாஜக மேலிடம் அமைத்துள்ளது. இந்த மேலிடப் பார்வையாளர் குழுவினர் 48 எம்.எல்.ஏக்களையும் அழைத்து பேசி அவர்களது கருத்துகளை கேட்டு வருகிறது. டெல்லியில் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு கிடைத்தும் புதிய முதல்வரை தேர்வு செய்ய முடியாமல் பாஜக திணறுவது ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் விமர்சனங்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.












Click it and Unblock the Notifications