சதம் அடித்த வெங்காய விலை.. ஈரான் உட்பட 4 நாடுகளிலிருந்து இறக்குமதி.. மத்திய அரசு முடிவு
டெல்லி: வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை கிலோ ஒன்றுக்கு ரூ .100 ஐ எட்டியுள்ளது. இது சாமானியர்களின் பாக்கெட்டுக்களை பதம் பார்க்கிறது.
இந்த நிலையில், நுகர்வோர் விவகார அமைச்சகம், வெளி நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வது அரசால் ஊக்குவிக்கப்படும் என்றும், இதனால் அதன் விலை குறையும் என்றும் கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தான், எகிப்து, துருக்கி மற்றும் ஈரானில் உள்ள இந்திய தூதரகங்கள் இந்தியாவுக்கு வெங்காயம் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் இருந்து விரைவில் 80 முதல் 100 வெங்காய கன்டெய்னர்களில், இந்தியாவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிரா மற்றும் பிற தென் மாநிலங்களிலிருந்து வெங்காயத்தை வட இந்தியாவுக்கு சப்ளை செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறது. ஆனால், நாட்டின் சில மாநிலங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக வெங்காய பயிர்கள் நாசமடைந்துள்ளன. அதனால்தான் வெங்காய சப்ளை குறைந்துள்ளது.
கர்நாடக மாநிலம் ஹூப்ளி, பெல்லாரியிலிருந்து வெங்காய வரத்து அதிகரித்தால், விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அம்மாநில தலைநகர், பெங்களூரை பொருத்தளவில், இன்று சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-ஐ எட்டியுள்ளது. பெரிய வெங்காயம், ரூ.50 முதல் ரூ.60 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விலையேற்றத்தை மனதில் வைத்து கோயம்பேடு மார்க்கெட்டில், வியாபாரிகள் வெங்காயத்தை இருமடங்கு விலையில் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் மளமளவென உயர்ந்த வெங்காய விலை, கிலோவுக்கு ரூ.80 என்ற அளவை தொட்டது. சில வாரங்கள் பிறகுதான் அது குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications